Skip to main content

மனைவியைக் கொன்ற இடத்திலேயே கணவர் தற்கொலை! திண்டிவனத்தில் பரபரப்பு...

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

Tindivanam

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவனும் அதே இடத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டிவனம் அருகே கொடியும் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (70). இவரது இரண்டாவது மனைவி  (45) வண்ணமயில். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் மூத்தமகள்  ராஜாமணி  நொளம்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இளைய மகள் மணிமேகலை சென்னையில் பணிபுரிந்து வருகிறார். சுப்பிரமணியின் முதல் மனைவி தனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு மனோன்மணி என்ற மகளும் மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர் இவர்கள் இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

 

சுப்பிரமணிக்கு இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்துள்ளது. இந்த நிலத்தை முதல் மனைவியின் மகன் மணிகண்டன் பெயரில் எழுதி வைத்துள்ளார். இதனால் இரண்டாவது மனைவி வண்ணமயிலுக்கும் சுப்பிரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி வண்ணமயிலுக்கும் சுப்பிரமணிக்கு ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணி கத்தியால் வண்ணமயிலை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வண்ணமயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

 

அப்போது சுப்பிரமணியம் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அருகிலிருந்தவர்கள் தடுத்துக் காப்பாற்றியுள்ளனர். இது சம்பந்தமான வழக்கில் சுப்பிரமணி கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியில் வந்த சுப்பிரமணி நேற்றுமுன்தினம் இரவு அவரது இரண்டாவது மனைவி வண்ணமயிலைக் கொலை செய்த இடத்தின் அருகில் உள்ள மரத்தில் தனது வேஷ்டியின் மூலம் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் சுப்பிரமணி உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

 

மனைவியைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வந்த அவரது கணவர், மனைவியைக் கொலை செய்த இடத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தக் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுற்றுலா வந்தவர்களின் கார் பயங்கர விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tourists' car tragic accident; 3 people lost their lives

விழுப்புரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சென்டர் மீடியத்தில் மோதியதோடு எதிர்ப்புறம் சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சோக நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவர் தன்னுடைய நண்பர் கீர்த்தி மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். பின்னர் சுற்றுலாவை முடித்துவிட்டு ஆந்திராவிற்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மொளசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. காரை விஜயகுமார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியத்தில் மோதி சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டிவந்த விஜயகுமார் பலத்த காயமடைந்தார். மணீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கீர்த்தி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்த காரில் பயணித்த பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி ஜெயந்தி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.