
அண்மையில் சென்னை பட்டினப்பாக்கம் மெரினா கடற்கரைச் சாலையில் சந்திரமோகன் என்பவரும், அவருடன் இருந்த தனலட்சுமி என்ற பெண் ஆகிய இருவரும், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாகப் பேசியிருந்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து போலீசாரிடம் அத்துமீறிய இந்த ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கிடையே பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாகப் பேசியதாகக் காவலர் சிலம்பரசன் என்பவர் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது விசாரணையில் இருந்து வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் 'பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் இருவரும் நடந்து கொண்டனர்' என காவல்துறை தரப்பு வாதத்தை வைத்தது. அதனைத் தொடர்ந்து 'இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்கப் போகிறீர்கள்?' என கேள்வி எழுப்பிய நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சந்திரமோகன் மட்டும் தினமும் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.