Skip to main content

“ஒரு காலத்தில் இந்து முன்னணி என்றால் மரியாதை இருந்தது” - உயர்நீதிமன்ற மதுரை  கிளை 

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
High Court Madurai Branch says Hindu front once meant respect

தஞ்சாவூர் மாவட்டம், ரயில்வே குடியிருப்புப் பகுதி அருகே ஆஞ்சநேயர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் 7 ஆம் தேதி, இந்தக் கோவிலின் முன்பு 3 பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை வேறு இடத்திற்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

இதன் பின்னர், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலர் ஒருவர், அங்கு மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல், பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பெண் காவலர், காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்கு மது குடித்துக் கொண்டிருந்தவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் குபேந்திரன், ரவி மற்றும் முத்தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் குபேந்திரன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த மனு மீதான விசாரணை இன்று (05-02-24) நடைபெற்றது. அப்போது நீதிபதி, “இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. ஆனால், தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு மிகவும் மோசமாகிவிட்டது” என்று கூறி குபேந்திரனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.