Skip to main content

அதிக எடைகொண்ட லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது! - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

Heavy lorries often cause accidents

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மலைப் பகுதியில் தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பாதையான திம்பம் மலைப்பாதை உள்ளது. அதில், 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வழியாகத்தான் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்துசெல்லும். 6 சக்கரங்கள் மற்றும் 16 டன் எடையளவு கொண்ட லாரிகள் மட்டுமே செல்லவதற்கு இங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும்போது பண்ணாரியில் உள்ள போக்குவரத்து, வனத்துறை மற்றும் காவல்துறையின் மூன்று சோதனைச் சாவடிகளில் பணியில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு, கூடுதலாகப் பாரம் ஏற்றிவரும் லாரிகளை திம்பம் மலைப்பாதையில் அனுமதிப்பதால்தான் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு மொத்தமாகப் போக்குவரத்து முடங்குவதாக அப்பகுதி மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது. 


இந்தப் போக்குவரத்துத் தடையால் ஆசனூர், தாளவாடி, சாம்ராஜ்நகர் செல்வோர் புலிகள் வாழும் வனப்பகுதியில் அச்சத்துடன் நீண்டநேரம் தவிக்க நேரிடுகிறது. அதேபோல இம்மலைப் பகுதிகளில் விளையும் பல டன் காய்கறிகளை உரியநேரத்திற்குள் அனுப்ப முடியாமல் அவை வீணாவதாகவும் மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வாகனங்களை எடை தணிக்கை செய்ய வனப்பகுதியை ஒட்டியுள்ள புதுவடவள்ளி மற்றும் ஆசனூரில் அமைக்கப்பட்ட எடைமேடை நிலையங்கள் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். 


அதிக பாரத்துடன் செல்லும் இத்தகைய வாகனங்களால் குறைந்தது 5 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். இதற்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதோடு தங்களது கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலனை செய்யாவிட்டால் பண்ணாரி சோதனைச் சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதோடு அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகளை சிறைப்பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தப்போவதாக தாளவாடியில் உள்ள மலைக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு; பணிகள் பாதிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Lawyers boycott court seeking suspension of three new laws

இந்தியா முழுக்க இன்று முதல் மூன்று புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டங்களுக்கு வக்கீல் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த  மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரியும், பெயர் மாற்றக் கோரியும் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) சார்பில் இன்று முதல் வரும் 8-ந் தேதி வரை கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் கோட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பெருந்துறை கொடுமுடி அந்தியூர் பவானி உள் படம் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் வக்கீல்கள் இன்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 1300க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) அந்தந்த நீதிமன்றம் அருகே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.

Next Story

பணம் இரட்டிப்பு மோசடி;3 பேர் கைது

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Fraud by claiming to double money; 3 people arrested

பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி விவசாயியிடம் ரூ.20 லட்சம் ஏமாற்றி பெற்ற சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்தியூர் சின்னத்தம்பி பாளையம் அண்ணமார் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (54) அப்பகுதியில் மளிகை கடை, விவசாயம், செங்கல் சூளை வைத்துள்ளார். வருவாயின் அளவு சிறியதாக இருந்ததால் அதனை இரட்டிப்பாக்க எண்ணினார். அப்போது அவருக்கு மூர்த்தி, சேகர் என்ற இருவர் அறிமுகமாகினர். தாங்கள் அளிக்கும் பணத்தை போன்று இன்னொரு மடங்கு பணம் வழங்கப்படும் என்று முத்துசாமியிடம் உறுதியளித்து நம்பிக்கை ஏற்படுத்தினர்.

இதனை நம்பிய முத்துசாமி கடந்த 23 அதிகாலை 3:00 மணியளவில் ஈரோடு பேருந்து நிலையம் பூக்கடை அருகே ரூ.20 லட்சம் ரொக்கத்தை மூர்த்தி, சேகர் அறிமுகப்படுத்திய நபர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் ரூ.30 லட்சம் இருப்பதாக கூறி கொடுத்த சூட்கேசை வாங்கிக் கொண்டு அந்தியூர் சென்று முத்துசாமி அதனை திறந்து பார்த்துள்ளார். அதில் இருந்தது போலியான ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலி ரூபாய் நோட்டுகள் குறித்து மூர்த்தி, சேகரிடம் கேட்க முற்பட்டார். அப்போது அவர்கள் இருவரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு டவுன் போலீசில் முத்துசாமி புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ் (45), இவரது தாய் மாமாவான சாமிநாதன் (58), பிரபு (39) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ஒரு மாருதி ஆம்னி வேனை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கடந்த 2023ல் திருப்பூர் மாவட்டத்தில் இதே போன்று ரூபாய் நோட்டுகளை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மோசடி செய்தது தொடர்பாக ரமேஷ் மற்றும் சாமிநாதன் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.