புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பாகூர், மதகடிப்பட்டு, திருபுவனை, வில்லியனூர் உட்பட கிராம பகுதிகளிலும், புதுச்சேரி நகர பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி, ஆறு போல் காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியது. இதனால் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர் கனமழையால் புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.