Skip to main content

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ‘வெப்ப அழுத்தம்’; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published on 14/05/2023 | Edited on 14/05/2023

 

'Heat stress' in Tamil Nadu for next 5 days; Meteorological Center warning

 

நேற்று (13-05-203) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர ‘மோகா’ புயலானது, வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (14-05-2023) காலை 08.30 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு - வடமேற்கே நிலை கொண்டுள்ளது. 

 

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

இதன் காரணமாக 14 ஆம் தேதி முதல் 16 தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றுக் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 17 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். அதேபோல் 14 ஆம் தேதியில் இருந்து 15 மற்றும் 16 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 முதல் 30 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்