Skip to main content

அனுமதியின்றி கள்ளுக்கடை திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை - ஐகோர்ட் எச்சரிக்கை

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
palm wine

 

அனுமதியின்றி நடத்தப்பட்ட கள்ளுக்கடையை மூடக்கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தஞ்சை பேராவூரணியைச் சேர்ந்த வரதரெங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  "எங்களது கிராமத்தில் 100 க்கும் அதிகமாக குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாய கூலிகளாக உள்ளனர். இந்நிலையில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், ஸ்ரீனிவாசன் அம்பலம் ஆகியோர் எவ்வித முறையான அனுமதியும் இல்லாமல்,  லாப நோக்கில் கள்ளுக்கடையை நடத்தி வருகின்றனர். பதநீர் இறக்குவதற்கான அனுமதியை வைத்து கள் இறக்கும் நிலையில், அதில் போதை மாத்திரை மற்றும் மருந்துகளைக் கலந்து விற்பனை செய்கின்றனர்.

 

எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து கள் குடிக்கின்றனர். இளைஞர்கள், சிறுவர்கள் என இளம் பருவத்தினர் பலரும் பாதிக்கப்படும் நிலையில், முறையான அனுமதி பெறாத இந்த  கள்ளுக்கடையை அகற்ற நடவடிக்கை கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, முறையான அனுமதியின்றி நடத்தப்படும் கள்ளுக்கடையை அகற்றவும்,  நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது. 

 

இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது "அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கள்ளுக்கடை மூடப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள், இனி வரும் காலங்களில் இது போல முறையான அனுமதியின்றி கள்ளுக்கடை திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்