Skip to main content

காதல் திருமணம்; கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மாப்பிள்ளை

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Groom passed away after love marriage in Trichy

 

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (25). இவர் சமீபத்தில் வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த கோபிகா (19) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்தப் பெண் அவருக்கு தங்கை முறை எனக் கூறப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, இவர் திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் உள்ள ஜே.எம் நீதிமன்றத்திற்கு கடந்த 21 ஆம் தேதி வழக்கு தொடர்பாக வந்துள்ளார். அங்கு பணி முடிந்தவுடன் மீண்டும் திரும்பிய நிலையில், அவரது மனைவி கோபிகாவின் உறவினர்கள் சிலர் கிருஷ்ணமூர்த்தியை காரில் கடத்தியதாகக் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து கோபிகா தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பெயரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த கடத்தல் சம்பவத்தில் கரூர் மாவட்டம் ஆர்.புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநாத்(24), அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக்(25), கரூர் கோயம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(23) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(29) ஆகிய நான்கு இளைஞர்களைக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் கடத்தல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்டு கிருஷ்ணமூர்த்தியைக் காவல்துறையினர் தேடி வந்தனர். 

 

இதனையடுத்து முசிறி துணைக் காவல் கண்காணிப்பாளர் யாஸ்மின் உத்தரவின் பெயரில், தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். அப்போது இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்திற்கு வந்து திரும்பிய போது, கார் ஓட்டுநர் சரவணன் உதவியுடன் அவரை, அவரது மனைவி கோபிகாவின் சகோதரன் ரவிவர்மன்(22), தாய் ஹேமலதா(37), பாட்டி பாப்பாத்தி(57), ரவிவர்மனின் நண்பன் தினேஷ்(33) ஆகியோர் சேர்ந்து கடத்திச் சென்று அவரை மாயனூர் அருகே காரில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு சடலத்தைக் கல்லணை அருகே காவிரி ஆற்றில் வீசிச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்