Skip to main content

“தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அரசு குறைப்பது நியாயமற்ற செயல்” - ஓபிஎஸ்

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

Govt reduction in grant-in-aid to private schools is unfair says o panneerselvam

 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை தி.மு.க. அரசு குறைப்பது நியாயமற்ற செயல் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

 

“குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் வகுக்கப்பட்டு 12-11-2011 முதல் தமிழ்நாட்டில் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்ந்து பயில வழிவகுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து பள்ளிகளுக்கு வழங்கும். கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், மேற்படி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த கட்டண விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

 

உதாரணமாக, 2020-2021 ஆம் ஆண்டில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு 12,458 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 6,000 ரூபாயாக குறைக்கப்பட்டுவிட்டது. இதேபோன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கட்டணங்களும் 2021-2022 ஆம் ஆண்டு குறைக்கப்பட்டன. 2022-2023 ஆம் ஆண்டிற்கான கட்டணம் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை வெகு சிறிதளவு உயர்த்தப்பட்டாலும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கட்டணம் 2020-2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெகு குறைவாகவே உள்ளது.

 

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சொத்து வரி, மின் கட்டண வரி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் வெகுவாக தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டு, செலவினம் அதிகரித்துள்ள சூழ்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளை இயக்குவதற்கே தனியார் பள்ளிகள் கஷ்டப்படுகின்ற நிலையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை தி.மு.க. அரசு குறைப்பது நியாயமற்ற செயல். இது தவிர, இந்தத் தொகையை விடுவிப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக பள்ளிகள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையை பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்னமும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. விலைவாசிக்கு ஏற்ப, ஆண்டுக்காண்டு உதவித் தொகையை உயர்த்துவதுதான் சரியான அளவுகோலாக இருக்குமே தவிர, குறைப்பது அல்ல.

 

மேலும், உதவித் தொகையை அரசு குறைவாக வழங்குவதும், காலந்தாழ்த்தி வழங்குவதும் பள்ளிகளை இயக்குவதில் பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்துவதோடு, மீதமுள்ள பணத்தை ஏழை, எளிய குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கும் நிலைக்கு பள்ளி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு உதவித் தொகையை குறைத்ததன் காரணமாக, பெற்றோர்களிடமிருந்து மீதிப் பணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை ஏழை, எளிய பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிகளை பெருத்த சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை, கல்வியில் தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித் தொகையைக் குறைத்து வெளியிட்ட ஆணை திரும்பப் பெறப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தனியார் பள்ளிகள் மற்றும் ஏழை எளிய பெற்றோர்களிடையே நிலவுகிறது.

 

ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் உதவித் தொகையை குறைத்து வெளியிட்ட ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.