Skip to main content

கத்தியுடன் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல்; பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

gang threatened woman with knife thoothukudi

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  அத்தை கொண்டான் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வருபவர் லாவண்யா. இவரது கணவர் தாமோதர கண்ணன். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் லாவண்யா அவருடைய அம்மாவுடன் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் லாவண்யா வீட்டிற்கு எதிர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழிகள் திருடு போய் உள்ளது. அப்போது எதிர் வீட்டில் வசிப்பவர்கள் ‘லாவண்யா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தால் யார் குற்றவாளிகள் என்பது தெரிய வரும்.’ என்று லாவண்யாவிடம் சிசிடிவி காட்சிகளைக் கேட்டுள்ளனர். அதற்கு லாவண்யாவும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சிசிடிவி காட்சிகளைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

இந்நிலையில் தீபாவளி தினத்தன்று லாவண்யா வீட்டிற்கு வந்த சில மர்ம நபர்கள் வீட்டு வாசலில் பட்டாசுகளை வெடிக்க வைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த லாவண்யா மற்றும் அவரது அம்மாவை அங்கிருந்த மர்மநபர்கள் அரிவாளால் தாக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து லாவண்யா அந்த மர்ம நபர்களை  துடைப்பக் கட்டையால் தாக்க முயற்சித்திருக்கிறார். 

 

மேலும் ஆத்திரமடைந்து வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி உள்ளே வந்த மர்ம நபர்கள் கார் மீது குதித்து அரிவாளைக் காட்டிக் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் லாவண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இது தொடர்பாக மகேந்திரன், மருதுபாண்டி, பூபேஷ் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்