Skip to main content

பணத்தை கேட்டு சென்ற இடத்தில் கைக்கலப்பு... உயிரிழந்த பெண்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Fight happens when women went to collect money... woman died

 

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையம் அருகில் உள்ளது பொம்மையார்பாளையம் மீனவர் பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மனைவி செண்பகவள்ளி (56). இவர் அதே பகுதியில் உள்ள ஐயப்பன்(45) என்பவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை அவ்வப்போது திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும் ஐயப்பன் தரவில்லை.

 

இந்த நிலையில் நேற்று (05.07.2021) இரவு 8 மணி அளவில் செண்பகவள்ளி, அவரது மகன் விமல் ஆகியோர் ஐயப்பன் வீட்டிற்குச் சென்று தங்களுக்குத் தர வேண்டிய பணத்தைத் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது ஐயப்பன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் “பணத்தை எங்களால் தர முடியாது உன்னால் முடிந்ததைச் செய்துகொள்” என்று செண்பகவள்ளி அவரது மகன் விமல் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த ஐயப்பனும் அவரது மனைவி திவ்யாவும் செண்பகவள்ளியை தாக்கியுள்ளனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் செண்பகவள்ளிக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.

 

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்படி கொண்டு செல்லும் வழியிலேயே செண்பகவள்ளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். மேலும், செண்பகவள்ளி கொடுத்த கடனைத் திருப்பி கொடுக்க மறுத்ததோடு அவரை தாக்கி உயிரிழப்புக்கு காரணமான ஐயப்பன், அவரது மனைவி திவ்யா ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கொடுத்த பணத்தைக் கேட்டதற்காக கொலை செய்யும் அளவிற்குத் துணிந்த ஐயப்பன், அவரது வழியும் திவ்யா ஆகியோரது செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்