Skip to main content

நிலத் தகராறில் விவசாயி மரக்கட்டையால் அடித்துக் கொலை; தம்பி மகன் வெறிச்செயல்! 

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

farmer was beaten to passed away with a log in a land dispute

 

நாமக்கல் அருகே, நிலத் தகராற்றில் விவசாயியை அவருடைய தம்பி மகனே மரக்கட்டையால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

 

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (60). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகேசனின் தம்பி, பாதர். இவருடைய மகன் தினேஷ்குமார் (31). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் பொதுச் சொத்தாக 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த சொத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக அவர்களிடையே பல ஆண்டாக முன்விரோதம் இருந்து வந்தது.    

 

இந்நிலையில், முருகேசனின் தம்பி பாதர், மகன் தினேஷ்குமார் ஆகியோர் ஏப். 4 ஆம் தேதி, நிலத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக முருகேசன் மற்றும் அவரது தரப்பினரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை தொடர்பு கொண்ட பாதர், சொத்துப் பிரச்சனையை சுமூகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி அவரை அழைத்துள்ளார்.  

 

இதை நம்பிய முருகேசன், ஏப். 6 ஆம் தேதி மாலை, பேச்சுவார்த்தைக்காக நாரைக்கிணறுக்குச் சென்றுள்ளார். அப்போதும் அவர்களுக்கு இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், அங்கிருந்த மரக்கட்டையால் முருகேசனை சரமாரியாகத் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த முருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி அவர் ஏப். 7 ஆம் தேதி அதிகாலை இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசனின் உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சேலத்தில் சாலை மறியலில்  ஈடுபட முயன்றனர். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதன்பிறகு, முருகேசனின் சடலம், சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தினேஷ்குமாரை கைது செய்தனர்.  அவரை ராசிபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சிறையில் அடைத்தனர். நிலப் பிரச்சனையில் தம்பி மகனே, பெரியப்பாவை அடித்துக் கொலை செய்த சம்பவம், நாமகிரிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.