Skip to main content

அரசு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

erode super speciality hospital construction work inspection ministers 

 

ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 67 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 8 மாடி கொண்ட கட்டடத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் எ.வ. வேலு, சு.முத்துசாமி ஆகியோர் இன்று ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார்கள். அங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று கட்டடம் தரமாகக் கட்டப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

 

அதன் பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு தலைநகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் கூடுதலாக 350 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ. 67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 11.3.2021 ஆம் ஆண்டு கட்டடப் பணி தொடங்கியது. கட்டுமானப் பணிகள் தரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். தரமான பொருட்களைப் பயன்படுத்தித்தான் கட்டப்பட்டுள்ளது. இன்னும் சிறு சிறு பணிகள் மட்டும் உள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விடும். சாலை பணியாளர்கள் நியமனம் செய்யும்போதே சாலை பணிகளுக்கு தான் என்றும் அவர்களுக்கு பதவி உயர்வு என்பது அரசாங்க விதிகளில் இல்லை. 

 

கோபியில் சங்கம் என்ற பெயரில் சாலை பணியாளர்களைத் தூண்டிவிட்டு போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலை பணியாளர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்துறையில் அதிக விபத்து ஏற்படுவதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அடுத்த முறை டெல்லிக்கு செல்லும்போது பாலம் வருவதற்கு வலியுறுத்தி தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கும். நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் கடைநிலை ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் நிலையில் இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு நெடுஞ்சாலைத் துறையில் 2003க்கு பின்னால் இருப்பவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கக் கூடாது எனவும் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

இதனைத் தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின் முடிவில் முதல்வர் ஆணையின்படி பதவி உயர்வு வழங்கப்படும். விதிக்கு உட்பட்டு அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.