Skip to main content

"உண்மை தெரியோனும் சாமி...!" -இறந்த மகள்களை பெற்ற பெற்றோர் கண்ணீர்...

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

"ஐயா, சாமி... நாங்க செத்துப் போன எங்க புள்ளைக உயிரை திருப்பிக் கேட்கலே... அவுங்க எப்படி செத்தாங்கனு நீதி தானுங்கைய்யா கேட்கிறோம்" என பரிதாபமாக கண்ணீர் விடுகிறார்கள் இரண்டு பெண் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் .

 

erode girl missing

 

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கழுதப்பாளி  என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  கரியான் மற்றும்   ஆறுமுகசாமி. விவசாய கூலி வேலை செய்து வரும் இவர்கள் அவர்கள் நேற்று தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கு நடந்த  மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது

நாங்கள் இரண்டு குடும்பம் எங்கள் கிராமத்தில்  பக்கத்து பக்கத்து வீட்டில்  வசித்து வருகிறோம்.  எங்களது மகள்கள் 16 வயது  சுகந்தி, 14 வயது ஓவியா இருவரும்  அரசு பள்ளியில் சுகந்தி பத்தாம் வகுப்பும் ஓவியா எட்டாம் வகுப்பும் படித்து வந்தார்கள்.

கடந்த  ஜனவரி  மாதம் 1 ந் தேதி புது வருடம்  இருவரும் கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டில்  கூறிவிட்டு போனவர்கள் தான் அவர்கள் இருவரும் மீண்டும் திரும்பி வரவே இல்லை. மூன்றாவது நாள் அதாவது ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பூங்கில்பட்டி என்ற இடத்தில் ஓடும்  பவானி ஆற்றில் சுகந்தியும் ஓவியாவும் பிணமாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்   பிரேத சோதனை அறிக்கையில் சுகந்தியும் ஓவியாவும் தண்ணீரில் மூழ்கி  இறந்து விட்டதாக தெரிவித்து இருந்தனர்.  ஆனால் நாங்கள் இதை நம்பவில்லை. எங்களது மகள்கள்  சாவில் மர்மம் இருக்கிறது. சுகந்தியும், ஓவியாவும் இறப்பதற்கு  முன்பு  பவானி ஆற்றங்கரையில் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த படம் வெளி வந்துள்ளது.  எனவே தான் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  எங்களது மகள்களுடன் உடன் சென்றவர்கள் யார்?யார்?  என்று போலீசார் விசாரிக்க வேண்டும். இதற்கு  உண்மை நிலையைக் கண்டறிய மாநில சிறப்பு புலனாய்வுத் துறை மூலமாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். நாங்களும் இந்த ஏழெட்டு மாதமாக ஒவ்வொரு அரசாங்க ஆபீசுக்கும் போய் மனு கொடுத்திட்டோம். இன்னும் எங்களுக்கு நீதி கெடக்கலே. நாங்க கேட்கறது எங்கபுள்ளைக இறந்தது இறந்தது தான் ஆனா அது விபத்து இல்லே என்னவோ நடந்திருக்குது அது என்னனு எங்களுக்கு உண்மை தெரியோனும் சாமி " என கண்ணீருடன் கதறினார்கள் மகள்களை பெற்ற பெற்றோர் .

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 Farmers are afraid of gangs who keep stealing goats

ஈரோட்டில் தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சமடைந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள கரியாக்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி மாலையில் பட்டியில் ஆடுகளை அடைத்து  வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை பட்டியில் வந்து பார்த்தபோது அதிலிருந்த 3 ஆடுகள் மாயமாகி இருந்தன. விசாரணையில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வடிவில் (66) என்பவரது பட்டியில் இருந்த மூன்று ஆடுகளும் திருட்டுப் போயிருந்தது. அடுத்தடுத்து இரண்டு பட்டியில் ஆடுகள் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருட்டுப் போன ஆடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும். இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து கால்நடைகள் திருட்டுப் போய் வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

விலங்குகளைச் சிதைக்கும் அவுட்டுக் காய்; 2 பேர் கைது

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Out Kai, which destroys animals; 2 arrested

சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 10 (வெடிக்கும்) அவுட்டுக் காய்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீசார் புளியங் கோம்பை, காசிக்காடு, வடக்கு பேட்டை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கம்பத்ராயன் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் திருமான்(60) எனத் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக் காய்களைப் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருமான் வீட்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் பத்து அவுட்டுக்காய்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில், திருமான் இருவரையும் கைது செய்தனர். மேலும் 10 அவுட்டுக் காய்களையும் பறிமுதல் செய்தனர்.