Skip to main content

கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தை; முடிவுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Erode collector spoke with Disabled people

 

ஈரோடு மாவட்டத்தில் தகுதியான மாற்றுத் திறனாளிகள் 100 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். ஈரோடு அரசு மருத்துவமனையில் நரம்பு, பக்கவாத பாதிப்பு பிரச்சனைகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை மற்றும் சான்றிதழ் வழங்க மருத்துவரை நியமிக்க வேண்டும். 

 

நரம்பியல், எலும்பு முறிவு சிகிச்சை ஆகியவற்றுக்கு சான்று பெற கோவை அல்லது சேலம் செல்லும் நிலையை மாற்ற வேண்டும். ஈரோடு ரெயில்வே நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனத்தில் நடைமேடை செல்ல அனுமதிக்க வேண்டும். பேட்டரி காரை மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிக்காக இயக்க வேண்டும். பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனம் நிறுத்த வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி நல அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் 40-க்கும் மேற்பட்டோர்  2-வது நாளாக நேற்றும் ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதையடுத்து நேற்று மாலை ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, “மாவட்ட நிர்வாகம் தரப்பில் அனைத்து முயற்சியும் செய்து உங்களுக்கு பட்டா வழங்க கடந்த டிசம்பர் மாதமே நில வருவாய் ஆணையருக்கு பரிந்துரை அனுப்பிவிட்டோம். அவர்களிடம் இருந்து உத்தரவு வந்ததும், பட்டா வழங்க இயலும். நாங்களாக வழங்க இயலாது. 2 வாரம் அவகாசம் கொடுத்தால் நில வருவாய் ஆணையரிடம் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கிறேன். இதனால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்” என்றார்.

 

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி துரைராஜ் கூறியதாவது, “கலெக்டர் அவரது தரப்பில் எடுத்த நடவடிக்கைகளை விளக்கமாக கூறினார். வீடு மனைப் பட்டா தொடர்பாக நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் எங்கள் மனுக்கள் நிலவையில் இருப்பதாக கலெக்டர் கூறியுள்ளார். இதனை அடுத்து நில நிர்வாக ஆணையரை சென்னையில் சந்திக்க எங்கள் மோட்டார் சைக்கிளில் கிளம்ப முயன்றோம். அப்போது கலெக்டர், ‘சென்னை செல்ல நிறைய சிரமங்கள் இருக்கும். நானே உங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று தருகிறேன். இந்த மாத கடைசிக்குள் அனைத்து கோரிக்கைகளும் சரி செய்யப்பட்டு ஏப்ரல் 10-ம்  தேதிக்குள் மீதமுள்ள 67 பேருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதனை ஏற்று எங்கள் போராட்டத்தை  வாபஸ் பெறுகிறோம்” என்று கூறினார். 

 

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் 2 நாட்களாக நடந்து வந்த காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.