Skip to main content

தேர்தல் விதிகளை மீறியதாக 25 வழக்குகள் - ஈரோடு எஸ்.பி. தகவல்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

 Erode by-election; 25 cases of violation of rules - Erode SP information

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23 ஆம் தேதி அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. சசிமோகன் கலந்துகொண்டு அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினார்.

 

பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் செய்தியாளர்களிடம் பேசும் போது, "அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஒவ்வொரு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். உங்கள் தரப்பில் வேறு இடம் அடையாளம் காணப்பட்டு இருந்தால் அது குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்பு காவல்நிலையங்களில் உரிய அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டங்களில் யார் யார் வருவார்கள், எத்தனை பேர் வருவார்கள், வாகன எண் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

 

அரசியல் கட்சியினர் ஊர்வலம் நடத்துவதாக இருந்தால் எந்த பகுதியில் நடத்துகிறார்களோ அந்த பகுதிக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். எந்த இடத்தில் ஊர்வலம் தொடங்கி எந்த வழியாக ஊர்வலம் வந்து நிறைவடைகிறது என்பது குறித்த விவரங்களையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் கார்களில் கட்சி சின்னம், கொடிகளை பொருத்தக்கூடாது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும்.

 

கட்சிக் கொடிகளை அகற்றுவது, பதாகை, பேனர்களை முறையாக மூடாமல் இருப்பது போன்ற வழக்குகள் ஈரோடு டவுன் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 3, சூரம்பட்டி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 6, வீரப்பன் சத்திரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 3, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5, கருங்கல்பாளையம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 என மொத்தம் 25 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்