Skip to main content

கரும்பு, வாழை தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்திய யானைகள்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

Elephants damage sugarcane and banana plantations!

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்துவருகின்றன. யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில், தாளவாடியை அடுத்த கெட்டவாடியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு ,வாழை பயிர்களை சாகுபடி செய்துள்ளார். 

 

நேற்று (06.07.2021) அதிகாலை வனப்பகுதியில் இருந்துவந்த 8 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து  கரும்பு, வாழை பயிர்களை முடிந்தவரை சாப்பிட்டுவிட்டுப் பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்து பார்த்த விவசாயி, யானைகள் பயிர்களைச் சேதப்படுத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த விவசாயிகள் சப்தம் போட்டும் பட்டாசு வெடித்தும் யானைகளைத் துரத்தினர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன. 

 

1 ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்பு, 500 வாழைகள், 50 தென்னை மரங்கள் என லட்சம் ரூபாய் மதிப்புள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தியது. தொடர்ந்து யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். யானைகளால் சேதமடைந்த விவசாயப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியைச் சுற்றி அகழி அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்