Skip to main content

கால்நடைகளுக்கு தீவனமாகும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முருங்கைக்காய்கள்..!  

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

Drumsticks exported abroad are now food  for cow

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தட்டார்மடம், போலையார்புரம், திசையன்விளை, முதலூர் போன்ற பகுதிகளிலுள்ள விவசாயிகளின் முக்கிய விவசாயமாக இருப்பது முருங்கைக்காய். முருங்கைக்காய்க்கு ஏற்ற மண் வளம் அந்தப் பகுதியிலிருப்பதால், அப்பகுதியினர் முருங்கைக்காய் சாகுபடியில் அதீத கவனம் செலுத்திவருகின்றனர். இந்தப் பகுதியில் முருங்கைக்காய் மொத்தமாகப் பயிர் செய்தாலும், சில விவசாயிகள் ஊடுபயிராகவும் பயிரிட்டுவருகின்றனர். இதன் அறுவடை சீசன் மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நடக்கும். 

 

இங்கு பயிராகும் முருங்கைக்காய்கள் தரமுள்ளவை என்பதால் கிராக்கியும் இருந்தது. இங்கு பறிக்கப்படும் முருங்கைக்காய்கள் முறையாக பேக்கிங் செய்யப்பட்டு கேரளா, சென்னை, மதுரை, மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் தரும் முக்கியத் தொழிலாக இருந்துவந்தது.

 

இந்த நிலையில், கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.10 முதல் ரூ.15 வரை கொள்முதல் செய்யப்பட்டது. வருமானம் குறைவு என்றாலும் வேறு வழியின்றி விவசாயிகள் வழக்கம்போல் அனுப்பிவந்தனர். தவிர, இந்த ஆண்டு இந்தப் பகுதிகளில் முருங்கைக்காய்களின் காய்ப்பும் வரத்தும் அதிகமானதன் காரணமாக திடீரென்று விலையில் இறக்கம் ஏற்பட்டு கிலோ 5 ரூபாய்வரை வியாபாரிகள் கொள்முதல் செய்ய நேரிட்டதால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். இந்த மகசூலில் பறிப்புக் கூலி கூடக் கிடைக்காததால் மனம் நொந்துபோன அவர்கள், அதனைப் பறித்து ஆடு, மாடு, கால்நடைகளுக்குத் தீவனமாக கொண்டு போகின்றனர்.

 

Drumsticks exported abroad are now food  for cow

 

இந்தப் பாதிப்பு தொடர்பாக முதலூரின் சேர்மக்கனி உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது, “கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் ஓரளவு இருந்ததால் கிலோ ஒன்றுக்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரை கூட கொள்முதல் செய்தனர். அது சமயம் எங்களுக்குக் கணிசமான வருமானம் இருந்தது. ஆனால் தற்போது விளைச்சலும் வரத்தும் அதிகமிருப்பதால் வியாபாரிகள் கிலோ 5 ரூபாய்க்குக் கொள்முதல் செய்வதால் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. 55 கிலோ கொண்ட முருங்கைக்காய் பார்சலை எடுத்துச் செல்வதற்கு 75 ரூபாய் வரை செலவாகிறது. கட்டுபடி ஆகவில்லை. அதனால்தான் முருங்கைக்காய்கள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக கால்நடைகளுக்குத் தீவனமாகப் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்’ என்கிறார்கள் கவலையுடன்.

 

திசையன்விளை பகுதியின் வியாபாரிகள் சிலரோ, “கேரள மார்க்கெட் எங்களுக்குக் கைகொடுத்தது. ஆனால், தற்போது அங்கே கரோனா தொற்று அதிகரித்ததால் கேரள பகுதிகளுக்கு அனுப்புவது மிகவும் குறைந்துவிட்டது. மேலும், விளைச்சல் அதிகமிருப்பதும் விலை குறைவிற்கு ஒரு காரணம். கடந்த வாரம் கிலோ 15 ரூபாய்க்கு விற்ற முருங்கைக்காய், 7 மற்றும் 5 ரூபாய் வரைக் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் முருங்கைக்காய் விவசாயம் முக்கியத் தொழில் என்பதால் அது சம்பந்தமான தொழிற்சாலைகளை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதோடு நிரந்தமான வருமானத்திற்கும் வழி பிறக்கும்” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.