Skip to main content

பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்போம்!  சமத்துவ மக்கள் கழகம் தீர்மானம்!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
erna

 

எர்ணாவூர் நாராயணனை தலைவராகக் கொண்ட சமத்துவ மக்கள் கழக நிறுவனத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அவர் தலைமையில் நெல்லை மாவட்டம் தென்காசி – குற்றாலம் சாலையிலுள்ள சௌந்தர்யா ஹோட்டலில் நடந்தது.

 

தமிழக அளவிலான சுமார் 350க்கும் மேற்பட்ட செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கழக நிறுவனத்தின் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

 

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது, மீனவர்களைப் பாதிக்கிற கடற்கரைப் பகுதி முழுவதற்குமாகக் கொண்டு வரப்பட்ட சாகர் மாலா திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், பெட்ரோலிய மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதியை மாற்றி, அதனை விவசாய மண்டலம் என்று அறிவிக்க வேண்டும், எட்டு வழிச்சாலையை அமைப்பதில் எந்தத் தரப்பினரையும் பாதிக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மாநில அரசின் உரிமைகளைப் பாதிக்காத வகையிலிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

 

er

 

செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்,    ‘’லோக் ஆயுக்தா சட்டம் வலுவானதாக இல்லை. செய்யாத்துரை மற்றும் ஏற்கனவே சேகர் ரெட்டி, ராமமோகன்ராவ் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டது என்ன ஆனது என்றே தெரியவில்லை. மத்திய அரசு, மற்றும் வருமானவரித்துறையும் இதற்கும் பதிலளிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

 

ஜி.எஸ்.டி. வரி மூலம் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர், சாமான்ய மக்களும் அதனால் கஷ்டப்படுகிறார்கள். டி.வி. மற்றும் பிரிட்ஜ்களுக்கு வரிகுறைப்பது பணக்காரர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. மத்திய அரசு ஒவ்வொரு முறையும், ரெய்டு நடத்தியே தமிழக அரசைத் தனக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கிறது’’என்றார்.

 

பேட்டியின் போது செயற்குழு உறுப்பினர்கள், பொ.செயலர் சூலூர் சந்திரசேகரன், மாநில அமைப்புச் செயலர் வழக்கறிஞர் கணேசன் துணை பொ.செயலர் இளஞ்சேரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

 
 

சார்ந்த செய்திகள்