Skip to main content

“எங்கிட்ட கரகம் தூக்கவும் ஆள் இருக்கு... கத்தி தூக்கவும் ஆள் இருக்கு...” - பூசாரியை மிரட்டும் திமுக நிர்வாகி 

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

DMK executive threatening the priest

 

“எங்கிட்ட கரகம் தூக்குறதுக்கும் ஆள் இருக்கு... கத்தி தூக்குறதுக்கும் ஆள் இருக்கு... முடிஞ்சத பாத்துக்கோங்க” என கோயில் பூசாரிகளை தகாத வார்த்தைகளால் வசைபாடிய திமுக நிர்வாகியின் வீடியோ வைரலாகி வருகிறது.

 

சென்னை பெரம்பூருக்கு அடுத்துள்ள வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45வது வார்டில் திமுக கட்சியில் வட்டச் செயலாளர் பதவியில் இருக்கிறார். இந்நிலையில், மாரிமுத்து வசித்து வரும் வியாசர்பாடி பகுதியில் உள்ள பீலிகான் முனீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதே சமயம், தனது சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாக்களில் மாரிமுத்து அங்கம் வகித்து வந்துள்ளார்.

 

அந்த வகையில்,  இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் பீலிகான் முனீஸ்வரர் கோயிலின் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கப்பட உள்ளது. ஆனால், அதே வேளையில் கடந்தாண்டு நடைபெற்ற திருவிழாவின் போது பணம் கையாடல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது, திருவிழா நிகழ்ச்சிகளில் செலவு செய்யப்பட்ட பணம் தொடர்பாக திமுக நிர்வாகி மாரிமுத்துவிடம் கோயில் பூசாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, கோயில் பூசாரிகளை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார். “யாரு மேலடா சந்தேகப்படுறீங்க... எங்கிட்ட கரகம் தூக்குறதுக்கும் ஆள் இருக்கு... கத்தி தூக்குறதுக்கும் ஆள் இருக்கு... முதல்ல அந்த பூசாரி யோக்கியமா? நான் இந்த ஊருக்குள்ள யோக்கியனா வாழ்ந்துட்டு இருக்கேன். அவன் என்ன பத்தி எப்படிடா பேசுவான். இனிமே நா சொல்றவங்க தான் கோயிலுக்கு வருவாங்க... முடிஞ்சத பாத்துக்கோங்க” என கோவமாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

 

அதே சமயம், திமுக நிர்வாகி மாரிமுத்து பேசுவதை அங்கிருந்த பூசாரி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதை சோசியல் மீடியாவில் லீக் செய்துள்ளார். தற்போது, இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், பூசாரிகளை தகாத வார்த்தைகளால் வசைபாடிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்