Skip to main content

“போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்” - விஜயகாந்த்

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

DMDK leader Vijayakanth said that transport employees should be declared as government employees

 

போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய உயர்வு 01 செப்டம்பர் 2023 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும். இரண்டு மாதம் கடந்தும் முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்காதது ஆட்சியின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. மேலும் ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வுக்காகப் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், உயர்த்தாமல் காலம் கடத்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

 

சமீப காலமாகப் பல வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. 22 ஆயிரம் வழித்தடங்களில் தற்போது 19 ஆயிரம் வழித்தடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிகிறது. இதில் பல பேருந்துகள் காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதினால் பொதுமக்கள் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் போக்குவரத்துத் துறை பெரும் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, சிறப்பு நீதிபதியை கொண்டு அனைத்து மண்டலங்களிலும் ஆய்வு செய்து, இழப்பு எந்த விதத்தில் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, இலவசத் திட்டத்தால் போக்குவரத்துத் துறைக்கு எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது, அதற்கான தொகையை அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறதா என ஆய்வு செய்து, நஷ்டத்தை ஈடு செய்வதற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் கடமையாகும். நஷ்டத்தை சரி செய்வதற்கு அரசு முயற்சி எடுப்பதைத் தவிர்த்துவிட்டு, அந்த நஷ்டத்தை போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் தலையில் சுமத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்.

 

போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் பண பலன்களை உடனே வழங்காமல் காலம் தாழ்த்துவது, ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படி உயர்வினை உடனே உயர்த்தாதது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே நடத்தாதது, ஒரு மாதத்திற்கு முன்பே பண்டிகை முன்பணம், போனஸ் போன்றவை வழங்காதது, ஓய்வு பெறும்போது ஒரு வருடத்திற்கு முன்பே ஏதாவது ஒரு குற்றத்தை சுமத்தி பணி உயர்வினைத் தடுத்து நிறுத்துவது, தொழிலாளர்களின் பணப் பலன்களை எப்படியெல்லாம் குறைக்க வழி உள்ளதோ, அந்த வழியைத் தேடுவது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டு, அரசு பொதுத்துறையான போக்குவரத்துத் துறையை, தனியார் துறை மூலம் நடத்துநர்கள், ஓட்டுநர்கள், பராமரிப்பாளர்களை நியமிப்பதை வன்மையாகக் கண்டிப்பதோடு, படிப்படியாகத் தனியார் மையத்திற்கு சாதகமாக அரசு செயல்படுகிறதோ என்ற அச்சம் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இதில் முழு கவனம் செலுத்தி பொதுத்துறையைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் போக்குவரத்துத் துறையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிரந்தரமாகத் தீர்வு ஏற்படுவதற்கு, போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.