Skip to main content

சாலையாக மாறிய ஓடை... பொதுமக்கள் போராட்டம்!!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான ஓடைகள் தூர்வாரும் பணிகள், தடுப்பணை, மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
 

dindugal issue


பொதுமக்களும் சாலை மறியல், ஊராட்சி அலுவலகம் முற்றுகை  உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் - செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள முறைகேடுகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அதிகாரிகளின் சமரசத்திற்கு பின்பு மறியலை கைவிட்டனர். இந்நிலையில் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 20வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு குறுவச்சி ஓடையை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் மூலம் சுமார் 6 இலட்சம் செலவில் தூர்வாரினார்கள். தற்போது அந்த ஓடையை தனியார் ஒருவரின் தோட்டத்தில் வீட்டடி மனைகளாக பிரிப்பதற்காக நீர் வரத்து ஓடையில் மண் மற்றும் சரளை மண்னை கொட்டி சாலையாக அமைத்து வருவதற்கு அண்ணாநகர் மற்றும் இந்திராகாலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் தரையில் படுத்து பணியை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் பிரிவில் மனு கொடுத்ததற்கு குறுவச்சி ஓடையை தூர்வாரியுள்ளோம் என்ற அறிக்கையை தந்துவிட்டு தனியாருக்காக ஓடையை தார்சாலையாக மாற்றி வருவது கிராம மக்களையும் நீர் வளம் காப்பவர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஜோசப் கூறுகையில், "கலிக்கம்பட்டி குளத்தில் நீர் நிரம்பி குறுவச்சி ஓடை வழியாக மழைநீர்; வந்து அருகில் உள்ள வாழைகுளம், பிலிப்பான்ஸ் குளத்திற்கு செல்லும். தற்போது வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணி ஓடையை சாலையாக மாற்ற உத்தரவிட்டுள்ளார். இதனால் அருகில் உள்ள இந்திரா காலனிக்குள் மழைநீர் மற்றும் வெள்ளநீர் புகுந்து உயிர் பலி ஏற்படுத்திவிடும்" என்றார்.

அண்ணாநகரை சேர்ந்த வானரசி கூறுகையில், "தமிழகம் முழுவதும் நீர் வரத்து பாதைகளை பாதுகாத்து குறைந்து வரும் நிலத்து நீரை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் ஆத்தூர் ஒன்றியத்தில் மட்டும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுப்பிரமணி நீர்வரத்து பாதையை தனியார் ஒருவருக்கு தார் சாலை அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார். அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்" என்றார்.

இந்திரா காலனியை சேர்ந்த சேசுராஜ் கூறுகையில், "ஆத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணி குறுவச்சி ஓடையை 6 இலட்சம் செலவில் தூர் வாரியதாக கணக்கு காண்பித்துள்ளார். இதுபோல் குறுவச்சி ஓடையின் மேற்குப்பகுதியில் 10 இலட்சம் செலவில் தூர்வாரியதாக கணக்கு காட்டியுள்ளார். ஆனால் இப்போது 6 இலட்சம் செலவில் தூர்வாரிய ஓடையின் மீது சாலையை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அரசு அதிகாரியே அரசு பணத்தை முறைகேடு செய்வது வேதனையாக இருக்கிறது" என்றார்.

அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வினோத் அருளானந்தம் கூறுகையில், "ஓடையின் கிழக்குப்புறம் தனியார் காண்டிராக்டர் ஒருவரின் தோட்டம் உள்ளது. குறுவச்சி ஓடையை தார் சாலையாக மாற்றி அவரது தோட்டத்தை மனைகளாக பிரிப்பதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரியும், ஊராட்சி செயலரும், பணம் பெற்றுக்கொண்டு இந்த ஏற்பாடை செய்து வருகின்றனர். இதனால் மழை பெய்தால் அண்ணாநகர் மற்றும் இந்திரா காலனிக்குள் மழைநீர் புகுந்துவிடும். உயிர் சேதமும் ஏற்பட்டுவிடும்" என்றார்.
 

dindugal issue


மத்திய அரசு பணத்தில் ஓடையை தூர்வாரியதாக கணக்கு காண்பித்துவிட்டு அந்த ஓடையின் மீது மண்ணை கொட்டி தார்சாலை அமைக்க அனுமதி கொடுத்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் ஊராட்சி செயலர் சேசுராஜை பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று என்.பஞ்சம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து முறைகேடுகள் என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வருவதால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட திட்ட இயக்குநர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஓடையின் மீது சாலை அமைக்க உத்தரவிட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி மீது மதுரை உயர்நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தமிழக அரசு பாதுகாத்து வரும் நிலையில் நீர்வரத்து பாதையை தார்சாலையாக மாற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி மீது மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.