Skip to main content

கலவரம் மூண்ட கடலூர்... இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

Cuddalore riots ... clash between fishermen on both sides

 

சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதால் மீன் வளம் குறைகிறது என்பதால் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி காலம் தொடங்கும்போது சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க கோரி கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி மீனவர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். இன்னொரு பக்கம் மற்றொரு பகுதி மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று போராட்டங்கள் நடத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலால் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மீன்பிடி வலைகள் கொளுத்தப்பட்டன. இருதரப்பு மீனவர்களிடையே பயங்கரமான கலவரம் மூண்டது.

 

இந்நிலையில் இந்த ஆண்டும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க கோரி ஒரு தரப்பு மீனவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், மற்றொரு தரப்பு மீனவர்கள் சுருக்குமடி வலையை அனுமதிக்க கூடாது என்று போராடுகின்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க கோரி உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று (19.07.2021) தேவனாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மீனவ பெண்கள் 250 பேர், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கடலில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுப்பதற்காக தேவனாம்பட்டினம் கிராமத்திலிருந்து புறப்பட்டு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களை கடலூர், வன்னியர்பாளையம் அருகே  தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ‘மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திக்க 5 பேர் மட்டும் செல்ல வேண்டும் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை’ என்று கூறி அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.

 

Cuddalore riots ... clash between fishermen on both sides

 

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வேறு வழியில் சென்ற மீனவப்பெண்கள் கடலூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்களிடம் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கடலூர் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக சமரசம் ஏற்படவில்லை. 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் அனைவரும் மாற்றுப்பாதையில் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இரவு 11 மணிவரை நீடித்த போராட்டம் அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக நள்ளிரவு முடிவுக்கு வந்தது.

 

ஒரே பகுதியில் இரு தரப்பு மீனவர்களிடையே சுருக்குமடி பயன்படுத்துவதில் தொடர்ந்து பிரச்சனைகள், போராட்டங்கள் நடைபெற்று வருவதால் கடலோர பகுதிகளில், மீனவ கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடலோர பகுதிகளில், மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.