Skip to main content

மது குடிக்கும் ஆவலில் வண்டியை கொளுத்திய இளைஞர்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

cuddalore kattumannarkoil youngster own bike incident
மாதிரி படம்

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சர்வராஜன்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரது மகன் மணிகண்டன் (வயது 30). இவர் மது அருந்துவதில் மிகுந்த விருப்பம் உள்ளவர். சம்பவத்தன்று தனது ஊரில் இருந்து காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மது அருந்துவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

 

அவரது இருசக்கர வாகனம் சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காட்டுமன்னார்கோவில் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று  எதிர்பாராத வகையில் வீரநத்தம் அருகே வாகனம் நடுரோட்டில் நின்று விட்டது. பலமுறை முயற்சி செய்தும் அவரது இருசக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. மது அருந்தும் ஆர்வத்தில் கடையை நோக்கி செல்லும்போது இருசக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்ததால் மணிகண்டனுக்கு தனது இருசக்கர வாகனத்தின் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. அதன் காரணமாக வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கில் இருந்த பெட்ரோலை எடுத்து வண்டி மீது ஊற்றி தீ வைத்து நடுரோட்டில் எரித்துள்ளார்.

 

பரபரப்பாக வாகனங்கள் செல்லும் அந்த சாலையில் ஒரு இருசக்கர வாகனம் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிவதை பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதை வீடியோ காட்சியாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவச் செய்தனர். இதை அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்