Skip to main content

உணவளித்த மூதாட்டி; நகையைப் பறித்த பெண்

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

cuddalore gold chain incident police arrested two persons

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில், பெண்ணாடம் அருகில் உள்ள மாளிகை கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 68). இவர் கணவர் இறந்த பிறகு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் சுமார் 3 மணி அளவில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது, சுமார் 35 வயது பெண் ஒருவர் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்துள்ளார்.  அந்தப் பெண் ஜெயலட்சுமியிடம், பசிக்கிறது, ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

 

ஜெயலட்சுமி வீட்டில் இருந்த சப்பாத்தியை தட்டில் எடுத்துக் கொண்டு திரும்பும் போது, அவரை பின் தொடர்ந்து வந்த அந்தப் பெண் திடீரென்று கத்தியைக் காட்டி ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் நகையைப் பறித்துக் கொண்டார். பிறகு வெளியே வந்த அந்தப் பெண் வீட்டின் வெளிப்புறமாகக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டு வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஜெயலட்சுமி தன் வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து வெளியே ஓடி வந்து, தன் நகையைத் திருடிக் கொண்டு ஓடுவதாகக் கூச்சலிட்டார்.

 

அருகில் இருந்தவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பிடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து அந்தப் பெண்ணை வண்டியில் உட்கார வைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றபோது, துரத்திச் சென்றவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து பெண்ணாடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரை திட்டக்குடி அருகே திருமணம் செய்து கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. கணவருடன் வாழாமல் தனது தந்தை வீட்டிலேயே வசித்து வந்த போது பெண்ணாடத்தைச் சேர்ந்த சேர்ந்த மெக்கானிக் உசேன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

 

தனியாக இருக்கும் பெண்களிடம் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்லும் போது உசேனுக்கு போன் செய்து அவரை வரவழைத்து அவரது இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்துள்ளனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் முகம் தெரியாதவர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்றும், அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.