Skip to main content

பொன்முடி மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

Court refuses to quash case against Ponmudi

 

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகப் புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றவழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட எம்.எல்.ஏ, எம்.பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் மற்றும் அவரது உறவினர் ஆகியோருக்கு எதிரான விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி கவுதம சிகாமணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரம் லோடு லாரிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 31 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு இருப்பதால் தற்போது இதிலிருந்து விடுவிக்க முடியாது என தெரிவித்து வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்