Skip to main content

மதுரையில் பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பிலிருந்த நபர்களைக் கண்காணிக்க தனிக்குழு - மதுரை மாவட்ட ஆட்சியர்

Published on 24/03/2020 | Edited on 25/03/2020

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த நபரோடு தொடர்பிலிருந்த 60 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்தார். 

 

 corona virus issue - Madurai district collector press meet

 



தமிழக அரசின் 144 தடை உத்தரவு குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த நபர் அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா தனிப்பிரிவில் வெண்டிலேட்டரின் உதவியின்றி மிக இயல்பாக உள்ளார். பல்வேறு வகையான உடற்கோளாறுகள் அவருக்கு முன்னரே உள்ளன என்பதால் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவரது தொடர்புகள் குறித்த அனைத்து விபரங்களும் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு ஏற்பட்ட நோய்த் தொற்று குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 9-ஆம் தேதி பக்கத்து வீட்டார் திருமணத்தில் அவர் பங்கேற்றுள்ளார். அந்நபரின் வீடு அருகே மற்றும் அந்தத் தெரு முழுவதும் தற்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரமாய் பராமரிப்பதற்கான பணிகளைப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அவர் வழக்கமாகச் செல்லக்கூடிய பள்ளிவாசலையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். அவருடன் நெருக்கமாக இருந்த குடும்ப உறவுகள் அல்லாத 60 நபர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தவிருக்கிறோம். அறிகுறி இல்லாத நபர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளோம். மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கரோனா தொற்று அறிகுறியுடன் ஏழு பேர் தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையின் தனிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நலம் குறித்த மேல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். வெளிநாட்டிலிருந்து மதுரை மாவட்டத்திற்கு 439 பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது வேண்டுகோள் அல்ல, அரசின் உத்தரவு என்றே அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகள் எதுவும் பாதிக்கப்படாத வண்ணம் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். காவல்துறை பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்து நடைமுறைகளும் மதுரை மாவட்டத்தில் அமல்படுத்தப்படும். மதுரையிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஷிப்ட் முறையில் 24 மணி நேரம் பணிபுரிகின்றனர். தற்போது மதுரைக்கு வரும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்படும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "சாலையோர வணிகமும் தடை செய்யப்படும். சமூக வலைத்தளங்களில் கரோனா குறித்து தவறான தகவல்கள் அனுப்புவதைத் தடுக்க காவல்துறையின் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்