சத்தீஸ்கர் மாநிலம், வெளிநாட்டில் இருந்து 337 ரூபாய்க்கு வாங்கிய கருவியை, தமிழக அரசு 600 ரூபாய் வீதம் முதற்கட்டமாக 24 ஆயிரம் கருவிகளை வாங்கியிருக்கிறது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டை எழுப்ப, மத்திய அரசு நிர்ணயித்த விலைக்குத்தான் அதை வாங்கினோம் என்று அரசுத் தரப்பு சொல்ல, இது இப்போது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது.
இந்த நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட கருவிகளில் 2 ஆயிரம், கோவைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் கரோனா தொற்றுப் பரிசோதனையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய கோவை அரசு மருத்துவமனை, அமைச்சர் வேலுமணியின் விருப்பப்படி, தொடக்க விழாவை நடத்தியிருக்கிறது.
அங்கே கொஞ்சமும் கூச்சமில்லாமல், ரிப்பனை வெட்டி பரிசோதனையை அமைச்சர் வேலுமணி தொடங்கிவைக்க, எது எதற்கு? எந்தெந்த நேரத்தில் விழா நடத்துவது என்ற விவஸ்த்தையே இல்லையா? எனப் பொதுமக்கள் முகம் சுளித்தனர். இதில் கொடுமை என்னவென்றால், விழாவில் பங்கேற்ற மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் அமைச்சருக்கு அருகிலேயே நெருக்கியடித்து நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்ததுதான். ஒருவருக்கொருவர் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்குமாறு செல்போனில் யாருக்காவது நாம் அழைப்பு விடுக்கும்போது அரசு அறிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது.