Skip to main content

‘நடுவுல கொஞ்சம் ரோட்ட காணோம்..’ - ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரிகள்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

contractor who left half the road not built in Tirupur Corporation

 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பழைய தார் சாலைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பின்னி காம்பவுண்ட் வீதியில் தார் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில், அந்த பகுதியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பயன்பாட்டில் இருக்கும் இரண்டு இடங்களில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

 

ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாத ஒப்பந்ததாரர், அதனை அப்புறப்படுத்தாமல் கார்கள் நின்று கொண்டிருந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் தார் சாலையை அமைத்துவிட்டு சென்றுள்ளார். அதே நேரம், சாலை சீரமைப்பு பணிகள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுகிறது. தற்போது அதனைக் காரணம் காட்டி இத்தகைய செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதனிடையே, கார்கள் நின்ற பகுதியில் இடைவெளி விட்டுவிட்டு தார் சாலை போட்டு சென்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதுமட்டுமின்றி, இந்த சாலை விவகாரம் தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. மேலும், நடுவுல கொஞ்சம் ரோட்டை காணோம் என்ற தலைப்பில் வைரலாக்கி வந்தனர்.

 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இந்த சாலை சீரமைப்பு பணிகள் நள்ளிரவு நேரத்தில் நடந்துள்ளது. மேலும், அந்த சமயத்தில் கார் உரிமையாளர் அங்கு இல்லாததால் பணி பாதிக்கக்கூடாது என்பதற்காக கார் நிற்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு தார்ச் சாலை அமைத்துள்ளனர். தற்போது, அந்த இடத்தில் விரைவில் சாலை அமைக்கப்படும். அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தனர். இத்தகைய சூழலில், சம்மந்தப்பட்ட இடத்தில் தார் சாலை அமைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, கார்கள் நின்ற இடத்தில் மீண்டும் சாலை அமைத்தனர். தற்போது, இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.