சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், 05.11.1970 அன்று ஈரோடு கருங்கல்பாளையத்தில், 'சொல்லின் செல்வரும்' தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தந்தையுமான ஈ.வி.கே. சம்பத் தலைமையில், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர், காந்தி சிலையைத் திறந்து வைத்தார். இன்றுடன் 50 ஆம் ஆண்டு பொன்விழா என்பதால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று, காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நடிகை குஷ்பு, பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றது குறித்து நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க.. தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்தால், நானும் பல விமர்சனங்களைச் செய்ய வேண்டியது வரும்.
பேரறிவாளன், நளினி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பல கருத்துகள் வருகின்றன அது உண்மையென்றால், அவர்கள் வழக்கில் இருந்து விடுதலை ஆவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அது சட்டத்துக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் விளைபொருட்களை நிர்ணயம் செய்வது ஒரு சில பணக்காரர்கள் கையில்தான் உள்ளது. அது ஆபத்தானது. தமிழகத்தில் பாரதிய ஜனதாவினர் வேல் யாத்திரை மட்டுமல்ல, என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் பா.ஜ.க.வால் தமிழகத்தில் எப்போதும் கால் ஊன்றவே முடியாது. திருமாவளவன் கூறிய கருத்துகள் நூறு சதவீதம் உண்மையானவை. அவரது கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சன போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. ஆனால், அது குறித்து அவர் கவலைப்படவில்லை. ஆனால், விதிமுறைப்படி போஸ்டர் ஒட்டப்பட வேண்டும். அவருக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டரை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது. கூட்டணியில், குறைவான தொகுதி கிடைக்கும் என சிலர் தவறாகப் பரப்பி அரசியலில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பா.ஜ.க.வை எதிர்த்து எங்களின் அரசியல் பயணம் தொடரும். தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமல்ல. இரு கட்சிகளுக்குமான கருத்தியல் நிலையில் ஒத்த கொள்கை கொண்ட கூட்டணி." என்றார்.