Skip to main content

விரட்டிச் சென்று திருடர்களைப் பிடித்த போலீசாருக்கு பாராட்டுகள்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Congratulations to the cops who chased and caught the thieves!

 

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த விஜயகுமார் தனது உறவினர் பெண்ணுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்த போது பனவெளி என்னுமிடத்தில் எதிரில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விஜயகுமார் சென்ற வாகனத்தை நிறுத்தி அவரிடம் இருந்த செல்போன், பணத்தைப் பறிக்க முயன்ற போது கொடுக்க மறுத்ததால் ஒரு வாளால் விஜயகுமாரை தாக்கினர். இதில் விஜயகுமாருக்கு மூக்கில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், அவரிடம் இருந்து செல்போனையும் கூட வந்த பெண் அணிந்திருந்த தோடுகளையும் பறித்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளனர்.

 

அந்த வழியாக வந்தவர்கள் சம்பவம் குறித்து காவல்துறையின் 100 என்ற தொலைப்பேசி எண்ணுக்கு தகவல் சொல்ல உடனே நடுக்காவேரி காவல்நிலைய சோதனைச் சாவடிக்கு தகவல் பறந்துள்ளது. சோதனைச்சாவடி பணியில் இருந்த காவலர்கள் கலியராஷ், முரளி ஆகியோர் திருடர்கள் சென்ற வழியில் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் செல்லும் போதே, அந்த பகுதியில் பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் இருந்த காவலர் நெடுஞ்செழியனுக்கு தகவல் கொடுக்க உடனே ரோந்துப் பணியில் இருந்த வாகனத்தை காவலர் ராஜ்குமார் வேகமாக ஓட்டி சென்று திருடர்கள் சென்ற வாகனம் மீது மோதினார்.

Congratulations to the cops who chased and caught the thieves!

திருடர்களின் வாகனம் கீழே சாய்ந்த நிலையில் எழுந்த திருடர்கள் வயல் வெளியில் ஓடிய போது போலீசார் வேகமாக ஓடி மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வாள், செல்போன், தங்கத் தோடு, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் கும்பகோணம் மொட்டைக்கோபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 20), தாராசுரம் ரமேஷ் (வயது 21) என்பதும் அவர்கள் ஏற்கனவே பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 

 

மேலும் திருடர்களின் தாக்குதலில் காயமடைந்த விஜயகுமார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் பிரசாத் என்ற காவலர் தனி ஆளாக கார் திருடனை விரட்டிச் சென்று பிடித்தார். அதேபோல தஞ்சையில் 4 போலீசார் 2 திருடர்களை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.