Skip to main content

“விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்” - ஆட்சியர் அறிவுறுத்தல்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Collector advice said Students to participate in sports competitions

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் தொடங்கவுள்ளதையடுத்து, திருச்சி கேம்பியன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேலோ போட்டியின் இலட்சினை மற்றும் விளையாட்டு ஜோதி உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் நேற்று காட்சிப்படுத்தி வைத்தார். 

இதையடுத்து பேசிய அவர், “இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 6வது கேலோ விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதில், களரிச் சண்டை (களரிஃபைட்), மல்லர் கம்பம் விளையாட்டுகள் திருச்சியிலும், கூடைப்பந்து விளையாட்டுகள் கோயம்புத்தூரிலும், கட்கா மற்றும் கோகோ விளையாட்டுகள் மதுரையிலும், இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரிலும் நடைபெறவுள்ளன.

திருச்சியில் நடைபெறவுள்ள போட்டிகளில் மல்லர்கம்பம் போட்டிகள் ஜனவரி 21 தொடங்கி 24 ஆம் தேதி வரையிலும், களரிச்சண்டை போட்டிகள் ஜன 27 முதல் 29 வரையிலும் அண்ணா விளையாட்டரங்க உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளை முன்னிட்டு அவற்றை விளம்பரப்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நம் நாட்டில் இளையோர் விளையாட்டுத்துறை மூலம் பணிக்கு அமர்ந்தாலும் அதன் பின்னர் விளையாட்டுகளை தொடர்வதில்லை. வெளிநாட்டினர் அப்படியல்ல; தொடர்கின்றனர்.

எனவேதான் அவர்களால் சாதிக்க முடிகின்றது. மாணவ, மாணவியர் விளையாட்டுப் போட்டிகளின் போது, பார்வையாளர்களாக மட்டும் இருக்கக் கூடாது. அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும். அபோதுதான் எந்தப்போட்டி நமக்கு உகந்தது என்பதை தேர்வு செய்யமுடியும். இதுவரை பங்கேற்காதவர்கள் இந்தாண்டு முதல் ஏதாவது ஒரு போட்டியிலாவது பங்கேற்க முடிவெடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தாண்டு சாதிக்க முடியும். அதேபோல போட்டிகளில் தோல்வியுற்றவர்கள் வருந்தக்கூடாது. தோல்விதான் வெற்றிக்கான உந்துதல். வெற்றி பெற்ற பலரும் பல தோல்விகளுக்குப் பின்னரே முன்னிலை பெற்றுள்ளனர். தோல்வியடையாமல் யாரும் முன்னுக்கு வரமுடியாது” என்றார் இதனைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.