Skip to main content

கோவை மாணவி தற்கொலை! சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர்! 

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Coimbatore school student case.. .teacher Mithun Chakaravarthy arrested by police

 

கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி, வியாழக்கிழமை மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி முதலில்  படித்த சின்மயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். 

 

இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உக்கடம் அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணை வளையத்தில் இருந்த ஆசிரியர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி உடுமலைப் பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை தேர்தல் முடிவு தொடர்பான வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Coimbatore election result case The court barrage of questions

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன என பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக பாஜகவிற்கு ஆதரவான அமைப்பு சார்பில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதே சமயம் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும் கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த சுதந்திரகண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கோவை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க எனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு வந்திருந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் எனது பெயரும், எனது மனைவியின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. 

Coimbatore election result case The court barrage of questions

கடந்த 2019 ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலும், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களித்துள்ள நிலையில் எங்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது மகள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இதேபோல எங்களது பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களும்  நீக்கப்பட்டுள்ளன. ஆனால் வாக்களர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கப்படுவதற்கு முன்பு உரிய விசாராணை நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்றே மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வலா மற்றும் நீதிபதி சந்திரசேகரன் அமர்வில் இன்று (30.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி வாதிடுகையில், “கடந்த ஜனவரி மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டது. மனுதாரர் தொகுதியில் வசித்து வரவில்லை. மாறாக அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 

Coimbatore election result case The court barrage of questions

கடந்த 2021 ஆம் ஆண்டே மனுதாரரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், “ஜனவரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?. படிவம் 6 மற்றும் 7 ஐ ஏன் பயன்படுத்தவில்லை. வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

கொடநாடு வழக்கு; சிபிசிஐடி போலீசில் 4 பேர் ஆஜர்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
The Kodanadu case; 4 people appeared in the CBCID police

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில், ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதாவது இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம் நடைபெற்ற கொடநாடு எஸ்டேட்டில் சில நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் தலைமையில் நிபுணர் குழு ஒன்று ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதே சமயம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நிபுணர் குழு அறிக்கையின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து முடிவெடுப்பதற்கு அரசு தரப்பு கால அவகாசம் கோரியது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வரும் ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் கொடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக ஓட்டுநராக பணியாற்றி வரும் ரமேஷ், ஜெயலலிதா கொடநாடு வரும் போதெல்லாம் அவருக்கு காய்கறிகள் வாங்கிக் கொடுக்கும் தேவன், கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேருக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள இந்த நான்கு பேரும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (30.04.2024) நேரில் ஆஜராகி உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.