
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தைக் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்துக் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி (15.07.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்தகைய சூழலில் தான் அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவர் காலை உணவைச் சுவைத்துப் பார்த்துவிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “முதலமைச்சர் காலை உணவுத்திட்டம்... இன்று எம்பள்ளி மாணவர்களுக்கு ரவா கிச்சடி, சாம்பார் மாதிரி உணவை உண்டு கருத்துக்களைப் பதிவேட்டில் பதிவு செய்தேன்... சிறப்பாக இருந்தது” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும், ‘உங்கள் பகுதியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட (CM Breakfast Scheme) உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா?’ என்று நான் கேட்பது வழக்கம். அந்த வகையில், ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன். காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது” நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.