Skip to main content

ஆதரவு தருவதாகக் கூறி கட்டைப் பையில் குழந்தையைக் கடத்திய பெண்... தஞ்சையில் பரபரப்பு!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

child incident excitement in Tanjore!

 

காதல் திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டார் ஆதரவும் இல்லாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதுபோல நடித்து மருத்துவமனையிலிருந்து குழந்தையைக் கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

தஞ்சாவூர் ராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனை. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்டங்களில் சிக்கலான கர்ப்பிணிப் பெண்களையும், பிரசவம் நடந்த பிறகு சிக்கலாகும் தாய் மற்றும் குழந்தைகளையும் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு போனால் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் இன்றளவும் உள்ளது. அங்குதான் அடிக்கடி குழந்தை திருட்டுகளும் நடப்பது வேதனையளிக்கிறது.

 

தஞ்சை பர்மா காலனி பகுதியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி குணசேகரன் (வயது 24). ராஜலட்சுமி (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு வீட்டார் ஆதரவும் இல்லாமல் இருந்துள்ளனர். ராஜலட்சுமி கர்ப்பமானது முதல் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்து கொண்டார்.

 

child incident excitement in Tanjore!

 

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கணவர் குணசேகரன் அவரது மனைவியை தஞ்சை ராசாமிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

 

ராஜலட்சுமி தனியாக இருப்பதைப் பார்த்த ஒரு பெண், ''உனக்காக யாரும் வரலையா? நான் உங்க அம்மாபோல இருந்து பார்த்துக்கிறேன்'' என்று கூறி 4 நாட்களாக கூடவே இருந்தவர். வெள்ளிக்கிழமை நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன். நீ குளித்துவிட்டு வா என்று ராஜலட்சுமியை குளிக்க செல்லுமாறு அனுப்பியுள்ளார். ராஜலெட்சுமியும் அவர் பேச்சை நம்பி குளித்துவிட்டு வந்து பார்த்தபோது அவரது பெண் குழந்தையை காணவில்லை. கதறி அழுதுகொண்டே கணவருக்கு தகவல் சொல்ல மருத்துவமனை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

 

child incident excitement in Tanjore!

 

அதன் பிறகு மருத்துவமனை சிசிடிவி கேமராக்களில் பார்த்தபோது ராஜலட்சுமிக்கு ஆதரவாக இருந்த பெண் குழந்தையை பச்சைநிற கட்டைப் பையில் வைத்துக் கொண்டு வெளியேறுவது தெரிந்தது.

 

இது குறித்து டி.எஸ்.பி கபிலன் தலைமையில் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார் குழந்தையை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர். சில வருடங்களாக கூடுதல் பாதுகாப்பு, சிசிடிவி பாதுகாப்பு வைக்கப்பட்டிருப்பதால் குழந்தை கடத்தல் குறைந்திருந்த நிலையில், மீண்டும் குழந்தை திருட்டு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது.