திமுக பிரமுகரை தாக்கிய புகாருக்குள்ளான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சுமார் 57 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் வாக்கு சதவீதம் மிகக்குறைவாக பதிவானது. குறிப்பாக சென்னையில் வாக்கு சதவீதம் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகக் குறைவாக 43 சதவீதம் பதிவானது. இதற்கிடையே வாக்குப்பதிவு தினத்தன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் சிலர் திமுகவை இளைஞர் ஒருவரை அரைநிர்வாணமாக்கி சாலையில் அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த வாலிபர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், " ஜெயக்குமார் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியுள்ளார். கழகம் இதனைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும். அப்போது அவர்கள் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற அம்பலப்படுத்தப்படுவார்கள். இந்த தேர்தலில் நம்முடைய வெற்றி உறுதியானது" என்று தெரிவித்துள்ளார்.