Skip to main content

முதலமைச்சர் தூத்துக்குடி விசிட்! மக்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி..!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

இந்த வருடம் வடகிழக்குப் பருவமழை முன்பைக் காட்டிலும் தமிழ்நாடு முழுக்க வெளுத்து வாங்கியதில், மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்திவருகிறார்.

 

கடற்கரை நகரமான தூத்துக்குடியும் வெள்ளத்திற்குத் தப்பவில்லை. நகரின் ரஹ்ம்த் நகர் நீதிமன்றம், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை. ஏற்கனவே இங்கு ஆய்வுசெய்த தொகுதி எம்.பி.யான கனிமொழியும் வெள்ள நிவாரணப் பணிகளை அதிகாரிகளைக் கொண்டு விரைவுபடுத்தினார். இந்த நிலையில் தூத்துக்குடியின் வெள்ளப் பகுதி பாதிப்புகளை ஆய்வு செய்யவும் மக்களைச் சந்திக்கவும் முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று (02.12.2021) மதியம் 1.45 மணிக்கு தூத்துக்குடி வந்தார். அவருடன் எம்.பி. கனிமொழி, சபாநாயகர் அப்பாவு, தொகுதி எம்.எல்.ஏ.வும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், அனிதா ராதகிருஷ்ணன், அமைச்சர் நேரு மற்றும் மார்க்கண்டேயன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் சென்றனர்.

 

நகரின் பிரையண்ட் நகரில் பாதிக்கப்பட்ட 1, 2ஆம் தெருக்களில் நடந்து சென்று ஆய்வுசெய்த முதல்வரிடம் அந்தப் பகுதி மக்கள் மழையின் பொருட்டு தங்களின் இன்னல்களைத் தெரிவித்தனர். அதனை நிவர்த்தி செய்வதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் அப்பகுதி நிலைமைகளை கலெக்டர் செந்தில்ராஜிடம் கேட்டறிந்த முதல்வர், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன் பின் மாநகராட்சியில் கமிஷ்னர் சாருஸ்ரீ, வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியான சி.ஜி. தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைள் பற்றி ஆலோசனை செய்த முதல்வர், தொடர்ந்து உரிய நடிவக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

ரஹ்மத் நகர், அதன் பின் வெகுவாகப் பாதிக்கப்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியின் வெள்ளப் பாதிப்புகளை நடந்து சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினிடம் அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து, ‘கடந்த பல ஆண்டுகளாகப் பெய்த, ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் இந்தக் காலனியில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. சாலைகளும் வெள்ளக்காடாகிவிடுகிறது. நாங்கள் அன்றாட வாழ்க்கையின் பொருட்டு வெளியே வரமுடியாத நிலைதான் ஏற்படுகிறது’ என்று முதல்வரிடம் தெரிவித்து மக்கள் அளித்த கோரிக்கையைப் பெற்ற முதல்வர், இனி அப்படி நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார். இதனையடுத்து எட்டயபுரம் சாலையில் உள்ள மண்டபத்திற்குச் சென்ற முதல்வர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பாய், உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். அனைத்து துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், நகரின் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.