சென்னையில் பள்ளி மாணவன் பள்ளி பேருந்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் கல்வி அதிகாரிகள் பள்ளியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆழ்வார் திருநகரில் வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த தீட்சித் என்ற 8 வயது மாணவன் இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். பள்ளி பேருந்தில் சென்ற மாணவன் பேருந்திலிருந்து இறங்கி நடந்த நிலையில் பேருந்தில் தனது பொருள் ஒன்றை விட்டுவிட்டதாக மீண்டும் பேருந்தை நோக்கி நகர்ந்துள்ளான். அப்பொழுது பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி நகர்த்தியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக மாணவன் தீட்சித் மீது பேருந்து சக்கரங்கள் ஏறி சிறுவன் உயிரிழந்தான். தற்பொழுது மாணவனின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்திலேயே நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பள்ளி பேருந்தை அலட்சியமாக இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தன் மகன் உயிரிழந்த தகவலை தங்களுக்கு பள்ளி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் தலைமையிலான அதிகாரிகள், அம்பத்தூர் வருவாய்த்துறை அதிகாரி இளங்கோ, துணை காவல் ஆணையர் மீனா ஆகியோர் பள்ளிக்கே நேரடியாகச் சென்று இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பள்ளி பேருந்தில் இருந்து மாணவர்களை இறக்கிவிடும் பெண் பணியாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.