Skip to main content

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி-க்கு கரோனா!- சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

 

chennai high court chief judge admit at govt hospital coronavirus

 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் சில வழக்குகளை நேரடியாகவும், பெரும்பாலான வழக்குகளை காணொளியிலும் விசாரித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில், வழக்கு தொடர்புடையவர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கறிஞர் சங்கங்கள், அவர்களின் அறைகள், செய்தியாளர் அறைகள் ஆகியவற்றை திறக்க தலைமை நீதிபதி சாஹி அனுமதி அளிக்கவில்லை.

 

நீதிபதி என்ற முறையில் வழக்குகளை விசாரிப்பது மட்டும் அல்லாமல், தலைமை நீதிபதி என்ற முறையில் நிர்வாக முடிவுகள் சார்ந்த விஷயங்களிலும் பணியாற்றி வந்தார். தமிழகம் முழுவதும் நடைபெறும் கீழமை நீதிமன்ற நிகழ்வுகளில் நேரடியாக செல்ல முடியாததால், காணொளியில் கலந்துகொண்டு வந்தார்.

 

கடந்த மாத இறுதியில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு சென்று வழக்குகளை விசாரித்தார். இந்நிலையில், தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் வியாழக்கிழமையன்று (நவம்பர் 5-ஆம் தேதி) நேரடியாகவும், காணொளி மூலமாகவும் வழக்குகளை விசாரித்தனர். இந்த அமர்வில், பா.ஜ.க. வெற்றிவேல் யாத்திரைக்கு தடைகோரிய வழக்குகள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசுடமையாக்க பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

 

நீதிமன்ற நேரம் முடிந்த பிறகு, மாலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தின் திறப்பு விழா நிகழ்வில் தலைமை நீதிபதி சாஹி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை கலந்து கொள்ளும் தலைமை நீதிபதி சாஹி, உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், இந்த நிகழ்வில் 10 நிமிடங்கள் மட்டுமே கலந்துகொண்டு  கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

 

பின்னர், சென்ட்ரல் எதிரே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று, அங்கு இரவு 07.30 மணியளவில் கரோனா பரிசோதனை மற்றும் சி.டி. ஸ்கேன் ஆகிய சோதனைகளை எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் முடிவுகள் வருவதற்காக அங்கேயே காத்திருந்தார்.

 

பின்னர் 10.00 மணியளவில் வந்த முடிவுகளில், தலைமை நீதிபதி சாஹிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை முதல்வர் தலைமையிலான மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மூன்றாவது டவர் பிளாக் கட்டிடத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.