அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு, அவரது நிலத்தில் செல்போன் டவர் அமைப்பதாகவும், அதன் மூலம் அவருக்கு மாதம் ரூ. 40,000 வருமானம் வரும் என்றும் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, டவர் அமைப்பதற்கு முன்பணம் ரூ. 40,00,000 மற்றும் மாத வாடகை ரூ. 40,000 தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரிடமிருந்து சிறு சிறு தொகையாக ரூ.23,98,900 வரை ஏமாற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 14.05.2021ம் தேதி புகார் அளித்தார். அதன் பேரில் அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடக்கிவிடப்பட்டது.
மேலும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) இணையக் குற்றப்பரிவு திருமேனி உத்தரவின் படி இணையக்குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில், உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர்கள் உள்பட 5 நபர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு டெல்லி சென்று சகர்பூர் இந்திரா நகர் என்ற இடத்தில் மருதுபாண்டியன் (37), ராஜேஷ் (36), முருகேசன் (40), ஜ்கிஷன் (42) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த லேப்டாப், செல்போன்கள், 18 சிம்கார்டுகள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், 19 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ரூ.1,00,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட நபர்கள் டவர் அமைப்பது, லோன் தருவது, ஏர்ப்போர்ட்டில் வேலை வாங்கி தருவது போன்ற இணையக்குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. எனவே நான்கு பேரின் வங்கி கணக்குகள், அவர்களின் அசையும் அசையா சொத்துக்கள் குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர். சைபர் கிரைம் தனிப்படையினரின் சிறந்த பணிக்காக அவர்களை நேரில் அழைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணா சுந்தர் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணா சுந்தர் அறிவுரை வழங்கினார்.