Skip to main content

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு! 

Published on 01/03/2022 | Edited on 01/03/2022

 

edappadi palanisamy

 

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு செய்தது என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டன. 

 

அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

 

இந்த நிலையில், சேலத்தில் ஆர்பாட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல, திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது, அனுமதி இல்லாமல் அதிக கூட்டம் கூட்டுதல், பிளக்ஸ் பேனர்கள் வைத்தல், கரோனா காலத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிப்பது ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்