சேலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காடையாம்பட்டி அருகே பொட்டியபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், 1.20 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் சேலம் சோளம்பள்ளத்தைச் சேர்ந்த விஜய் (32) என்பதும், காடையாம்பட்டி சுற்று வட்டாரங்களில் ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து கிலோ 3 ரூபாய்க்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை பாலீஷ் செய்து, கர்நாடகா மாநிலத்தில் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து விஜய்யை காவல்துறையினர் கைது செய்தனர். கடத்திச் செல்ல முயன்ற ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களையும் தேடி வருகின்றனர்.