Skip to main content

“வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் பட்ஜெட்” - ராமதாஸ் 

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

"Budget for development and infrastructure development" - Ramadoss

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், வேளாண் வளர்ச்சிக்கான திட்டங்களும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் அனைவரும் எதிர்பார்த்த வருமானவரி விகித மாற்றம் குறித்து நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

 

மத்திய அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். கரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் கடந்த இரு ஆண்டுகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்த நிலையில், அவற்றை மேம்படுத்த மத்திய அரசு எத்தகைய திட்டங்களை அறிவிக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் அதிக அளவில் இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்புகளில் கணிசமானவற்றை மத்திய நிதி நிலை அறிக்கை நிறைவேற்றியிருக்கிறது. அந்த வகையில் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.

 

இந்தியாவின் உடனடித் தேவை பொருளாதார வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு மேம்பாடும், வேலைவாய்ப்பு பெருக்கமும்தான். அவற்றை நிறைவேற்றும் வகையில் வரும் ஆண்டில் ரூ. 7.50 லட்சம் கோடி மூலதன செலவுகளுக்காகச் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 35.40% அதிகமாகும். கட்டமைப்புக்கான அரசின் முதலீடு இந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நடப்பாண்டில் 25,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்; 2000 கி.மீ இருப்புப்பாதைகள் மேம்படுத்தப்படும்; வேளாண் பொருட்களை தொடர்வண்டி மூலம் கொண்டு செல்ல கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் பயனளிப்பவை.

 

2025-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி வழங்கப்படும்; 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியவை. 80 லட்சம் ஏழைகளுக்கு வீட்டு வசதி வழங்க ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கீடு, 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் செயல்வடிவம் பெறும்போது கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து நாடும், மக்களும் மீண்டு வர முடியும். கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 200 கல்வித் தொலைக்காட்சிகள் தொடங்கப்படும்; அனைத்து மாநில மொழிகளிலும் கல்வி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது.

 

வேளாண்மையைப் பொறுத்தவரை நெல் மற்றும் கோதுமை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக ரூ.2.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதன் மூலம் இதுதொடர்பாக உழவர்களிடம் நிலவி வந்த ஐயங்கள் போக்கப்பட்டுள்ளன. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்; வேளாண்மையில் ஆளில்லா விமான தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும்; 2022-23ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கடைபிடிக்கப்படும்; சமையல் எண்ணெய் தேவையில் தற்சார்பு அடையும் நோக்குடன்  எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

 

ஆனாலும்கூட, வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துதல், வேளாண் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தை விவசாயத்திற்கும் நீட்டித்தல் ஆகியவற்றையும் செய்தால் மட்டும்தான் வேளாண்தொழிலை லாபகரமானதாக மாற்ற முடியும். ஆனால், அதற்கான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

 

கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு- காவிரி இணைப்புக்கான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு இருப்பதாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க முன்னேற்றம் ஆகும். இந்தத் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்று திட்டப்பணிகளை வரும் ஆண்டிலேயே தொடங்க மத்திய அரசு முன்வர வேண்டும். பாசனத் திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.44 ஆயிரம் கோடி  நிதி போதுமானது அல்ல என்பதால் அதை இரட்டிப்பாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

 

வரி சீர்திருத்தங்களும் குறிப்பிடத்தக்க அளவில் செய்யப்பட்டுள்ள போதிலும், அது ஏழை, நடுத்தர மக்களுக்கு சாதகமாக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12 விழுக்காட்டிலிருந்து  7 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாத ஊதியப் பிரிவினர் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வரும் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு உயர்வு, வருமானவரி விகிதங்களின் மாற்றம் ஆகியவை குறித்த எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. அதேபோல், 350-க்கும் கூடுதலான வரிவிலக்குகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படுவதும்  மக்களைப் பாதிக்கும்.

 

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பயனளிக்கும் அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிந்துள்ளன என்பதைத் தவிர, 2022&23ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை நாட்டின் வளர்ச்சியையும், விவசாயிகளின் நலனையும் அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்