Skip to main content

பாஜக மாநில துணை தலைவர் சிறையில் அடைப்பு

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

BJP State secretary arrested in dharmapuri

 

நெஞ்சுவலி இருப்தாகக் கூறி நாடகமாடிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை, காவல்துறையினர் பலவந்தமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பாரத மாதா நினைவக வாயில் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்த வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

 

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாஜக சார்பில் பாத யாத்திரை நடந்தது. அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான கே.பி.ராமலிங்கம் யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவருடைய தலைமையில் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று, பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவா நினைவிடத்தை அடைந்தனர். அந்த நினைவிட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கட்சியினர் முயன்றனர்.

 

ஆனால் நினைவாலய வாயில் கதவு பூட்டப்பட்டு இருந்தது. நுழைவு வாயில் பூட்டைத் திறந்து விடும்படி அங்கிருந்த ஊழியரிடம், கே.பி.ராமலிங்கம் கேட்டார். ஆனால் அந்த ஊழியரோ, உயர் அதிகாரிகளின் உத்தரவின்றி கதவைத் திறந்து விட முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கே.பி.ராமலிங்கம், கீழே கிடந்த கல்லை எடுத்து பாரத மாதா நினைவக வாயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் அவர் தலைமையில் பாஜகவினர், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

 

இதையடுத்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாகவும், அத்துமீறி நுழைந்ததாகவும் கூறி கே.பி.ராமலிங்கம் மற்றும் பாஜகவினர் மீது பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கே.பி.ராமலிங்கத்தை ஆக. 14ம் தேதி கைது செய்தனர். சிறைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு அவருக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு ரத்தக்கொதிப்பும், நெஞ்சுவலியும் இருப்பதாகக் கூறியதை அடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

 

இது ஒருபுறம் இருக்க, அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க பென்னாகரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, கே.பி.ராமலிங்கம் உடல்நலம் தேறியது. அவர் குணமடைந்ததாக மருத்துவர்கள் சான்றளித்தனர். இதனால் அவர், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை (ஆக. 18) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைப்பதற்காக பாப்பாரப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வந்தனர். ஆனால் அவர்களிடம் கே.பி.ராமலிங்கம் தனக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், தன்னால் சிறைக்கு வர முடியாது என்றும் கூறினார். ஆனாலும் காவல்துறையினர், அவரை பலவந்தமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.