ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (30/09/2020) ஈரோடு பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில், அதன் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், நிர்வாகிகள் சிலர் மாவட்ட எஸ்.பி தங்கதுரையை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.
பிறகு, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரச்சலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ ஒருவர், அரச்சலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வாகன தணிக்கை என்ற பெயரில், பொதுமக்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் விவசாய விளை பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களையும் வழிமறித்து, ஏதாவது விதிமீறல் எனக் காரணம் காட்டி சட்டத்துக்குப் புறம்பாக பணம் வசூல் செய்து வருகிறார்.
சட்டப்படியான அபராதம் கட்ட தயார் என வாகன உரிமையாளர்கள் சொன்னாலும்கூட, சட்டத்துக்கு உட்பட்டு அதிகபட்ச தொகையை விதிப்பேன் என்று மிரட்டுகிறார். இதன் காரணமாக, வாழைத்தார் வாங்கும் வியாபாரிகள் அரச்சலூர் பகுதியில் வாழைத்தார் வெட்டுவது என்றாலே பிரச்சனை வரும் என இந்தப் பகுதிக்கு வர பயப்படுகின்றனர். இதனால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர் கதையாகி வருகிறது, எனவேதான் எஸ்.பி.யிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தோம்” என்றனர்.