Skip to main content

சென்னை விபத்து எதிரொலி... புதுக்கோட்டையில் சாலைமறியல்...

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

 

சென்னையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து ஒருவர் பலியான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் சுற்று சூழலையும் மண்ணையும் மாசுபடுத்தி வாகன ஓட்டிகளின் கவணத்தை திசைதிருப்பி விபத்துகளை ஏற்படுத்தும் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்தாலும் அரசியல்வாதிகளின் அரசு விழாக்கள் இன்றும் சாலைகளை அடைத்துக் கொண்டு தான் நிற்கிறது.

 

- Pudukkottai -



இப்படி பதாகை வைக்கப்பட்டு நடத்தப்படும் விழாக்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் உள்பட நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றாலும், அந்த விழாக்களில் கலந்து கொள்ளும் அவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கி நீதிமன்றங்களை அவமதித்து வருகின்றனர். 
 

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது. அந்த விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன், அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



 ஆனால் விழாவிற்கு சென்ற மாவட்ட முதன்மை நீதிபதி நீதிமன்ற திறப்பு விழாவுக்கு அதிமுக வழக்கறிஞர்கள் வைத்திருந்த பதாகைகளை பார்த்துவிட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள பதாகைகளை உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதிமுக பதாகையில் நீதிபதி பெயர் இருப்பதால் அந்த உத்தரவு என நினைத்தவர்கள் நீதிபதி பெயரை மட்டும் மறைத்தனர் ஆனால் மொத்த பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார். அதன் பிறகு பதாகைகளை அகற்றினார்கள். விழா நடந்து முடிந்தது.
  ஆனால் அதன் பிறகு நடக்கும் எந்த அரசு விழாவாக இருந்தாலும் பதாகைகளுக்கு பஞ்சமில்லை நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. 



 


புதுக்கோட்டை நகரில் பிரதானமான இடங்களில் அதிமுகவினர் சிலர் நிரந்தரமாக இடம்பிடித்து வைத்துள்ளனர். எந்த விழாவானாலும் பதாகை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே போல நகர் முழுவதும் பதாகைகள் அதிகமாக உள்ளது. சமூக ஆர்வலர்கள் பலரும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் தான் இன்று சென்னையில் பதாகை விழுந்து ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பான நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இணைந்து பதாகைகளை அகற்று என்று இரவில் திடீர் சாலை மறியல் போராட்டததில் ஈடுபட்டனர்.
 

சார்ந்த செய்திகள்