Skip to main content

வீடியோ ஆதாரத்துடன் நக்கீரன் அம்பலப்படுத்திய மோசடி!  விஜயநல்லதம்பி கைது!    

Published on 02/07/2023 | Edited on 02/07/2023

 

Arrested person who defrauded Rs 3.5 lakh by claiming to buy food jobs

 

பலரிடம் பண மோசடி செய்வது, மோசடி புகாருக்கு ஆளாகி கைதாவது, பிறர்  மீது மோசடி புகார் தருவதெல்லாம் விஜயநல்லதம்பி வாழ்க்கையில்  வாடிக்கையாக நடந்துவருவதுதான். தற்போது சத்துணவு வேலை வாங்கித்  தருவதாக ரூ.3.5 லட்சம் மோசடி செய்த புகாரில் கைதாகியிருக்கிறார்  விஜயநல்லதம்பி.   

 

விஜயநல்லதம்பி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி என்பதும்,  தற்போதைய விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர்  ரவிச்சந்திரனின் தம்பி என்பதும் தெரிந்ததே. மேலும் இவர்,  பஞ்சாயத்து  தலைவர், யூனியன் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்,  அதிமுக  வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.  விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராகவும்,  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அரசு  வழக்குரைஞராகவும் இருந்துள்ளார்.   இப்படியொரு அழுத்தமான பின்னணி உள்ளவர் என்பதால், எத்தனை மோசடி  புகார்கள் வந்தாலும், விஜயநல்லதம்பி விஷயத்தில் காவல்துறை அத்தனை  கடுமை காட்டுவதில்லை. மேலும், நீதித்துறை வட்டாரத்தில் பெரிய அளவில்  முன்பிருந்த பழக்கத்தின் காரணமாக, விஜயநல்லதம்பியை காவல்துறை நெருங்குவதற்கு முன்பாகவே, அவருக்கு தகவல் போய்விடும் என்று கூறப்படுகிறது.   

 

கடந்த 2022ல், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் விஜயநல்லதம்பி, தன்  அண்ணன் ரவிச்சந்திரன் மீது மோசடி புகார் அளித்திருந்தார். அதில், அரசு  வேலை வாங்கித் தருவதாகக் கூறி 7 பேரிடம் ரூ.68 லட்சத்தை வாங்கி,  ரவிச்சந்திரன் ஏமாற்றிவிட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார்.  ஏமாற்றப்பட்ட 7  பேரும் விஜயநல்லதம்பிதான் எங்களிடம் வேலை வாங்கித் தருவதாகப்  பணம் வாங்கினார் என்று கூறிவிட, அது விஜயநல்லதம்பி அளித்த பொய்ப்புகார் என்பது விசாரணையில் தெரியவந்தது.   தன்னிடம் டிரைவராக வேலைபார்த்த தங்கதுரையின் மனைவி  கிருஷ்ணவேணிக்கு சத்துணவு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.5  லட்சத்தை வாங்கிய விஜயநல்லதம்பி ஏமாற்றியதோடு, கொலை மிரட்டலும்  விடுத்தார். கடந்த 1-10-2020 அன்று விஜயநல்லதம்பியிடம் ரூ.3.5 லட்சத்தைக் கொடுத்தபோது, கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷ், ரகசியமாகத் தனது  செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துகொண்டார்.    

 

கடந்த 20-8-2020 அன்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கிருஷ்ணவேணி  அளித்த புகார் மீதான விசாரணையைத் தொடர்ந்து, விஜயநல்லதம்பி மீது  பண மோசடி, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு  பிரிவுகளில் வழக்கு பதிவானது. மேலும் பலர் விஜயநல்லதம்பி மீது புகார்  அளித்திருக்கும் நிலையில், விஜயநல்லதம்பியை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

 

கிருஷ்ணவேணி தரப்பிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி  விஜயநல்லதம்பி பணம் பெற்றுக்கொண்ட வீடியோ பதிவை,  முதன்முதலில்  3-12-2022ல்   ‘அரசு வேலை மோசடி; அதிமுக ஒ.செ. பணம் வாங்கிய வீடியோ  ஆதாரம்; கில்லாடி நல்லதம்பி’ என்னும் தலைப்பில் வெளியிட்டு, அந்த  மோசடியை அம்பலப்படுத்தியது நக்கீரன் இணையதளம்.   ரூ.3 கோடி பண மோசடி புகாரில் கைதாகி நிபந்தனை ஜாமீனில்  விடுவிக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவர் மீது  மோசடி புகார் அளித்தது விஜயநல்லதம்பிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்