Skip to main content

“குண்டு சத்தம் கேட்டதும் செத்துட்டேன்னு நெனச்சிக்கோங்க அம்மா...” - வீடியோ காலில் ராணுவ வீரர் தற்கொலை 

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

Army soldier lost their life after losing 20 lakhs in online rummy.

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழக்கரந்தை கிராமத்தில் வேலுச்சாமி, கனக வேலம்மாள் தம்பதியருக்கு மணித்துரை என்கிற ஒரே மகன். அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சொற்ப வருமானம் கொண்டவர்கள். குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இல்லாதவர்கள். ஆனாலும் வீட்டில் ஒருவர் அரசுப் பணியில் இருக்கவேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக மணித்துரை தன் பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்.

 

அவ்வப்போது விடுமுறையில் ஊர் வந்து செல்கிற மணித்துரைக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் உதயசுருதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தம்பதியருக்கு குழந்தை இல்லை. இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணித்துரையின் தந்தை வேலுச்சாமி சாலை விபத்து ஒன்றில் உயிரிழக்க, குடும்பத்தில் தாங்க முடியாத சோகம். அந்த சம்பவம் நடந்த அடுத்த சில மாதங்களில் அடுத்த சோகம்.

 

ஜூலை 1 ஆம் தேதியன்று வழக்கம் போல் மணித்துரை ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது திடீரென துப்பாக்கியால் தனக்குத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். ராணுவ உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் அண்மை நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வமாயிருந்த மணித்துரை அதில் அதிக அளவில் பணம் இழந்ததாகவும், கணக்கிலிருந்த தன் சம்பளப் பணம் 18 லட்சத்தையும் அதில் இழந்தது தாங்க முடியாத மன வேதனையில் நொறுங்கிப் போனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

 

Army soldier lost their life after losing 20 lakhs in online rummy.

 

மணித்துரை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தை மட்டுமல்ல கிராமத்தையும் உறைய வைத்திருக்கிறது. இதில் இன்னொரு துயரம் என்னவெனில், மணித்துரை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கீழக்கரந்தையிலிருக்கும் தன் தாய் கனகவேலம்மாளை தன் செல்லில் அழைத்திருக்கிறார். வழக்கமாகப் பேசுகிறவர் தானே எனத் தாயும் ஆவலுடன் பேச, மணித்துரையும் வீடியோ காலிலேயே தாயை அழைத்தவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணம் இழந்துவிட்டேன். இதற்காக சிலரிடம் பணம் வாங்கியுள்ளதாகவும், அத்தனையும் இழந்ததாகச் சொன்னவர், ஊருக்கு வர மனமில்லை. பணத்தை இழந்த நான் வாழ விரும்பவில்லை. இரண்டு துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் நான் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள். அதுவரை என்னோட பேசும்மா என்று சொன்னவர் செல்லில் பேசிக்கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சத்தம் இரண்டு முறை கேட்டதற்கு பின் மணித்துரை பேசவில்லை என்றதும் அவரது தாய் கதறித் துடித்திருக்கிறார்.  பேசிக்கொண்டிருந்தவன் தன் காதுபட சுட்டுத் தற்கொலை செய்துகொண்டது பெற்ற மனதை சுக்கு நூறாக்கியிருக்கிறது. 

 

மணித்துரை தன் அக்கவுண்ட்டில் உள்ள சம்பளப் பணம் அத்தனையும் இழந்ததைத் தொடர்ந்து கடைசி வாய்ப்பாக தன் தாயிடம் இரண்டு லட்சம் வேண்டும், அவசர காரியம் என்று கேட்க, மறுவார்த்தை பேசாமல் அவரும் கேட்ட பணத்தை அனுப்பியிருக்கிறாராம். அத்தனையும் ஆன்லைன் ரம்மியில் அவர் இழந்தது தற்கொலைக்குப் பின்னர்தான் தெரிய வந்தது என்கிறார்கள்.  ஜூலை 3 ஆம் தேதியன்று ராணுவ வீரர் மணித்துரையின் உடல் அவரது சொந்த கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டு கிராம மக்களின் கண்ணீர் அஞ்சலிக்குப் பின்னர் எரியூட்டப்பட்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மி அதிகாரப் பூர்வமாக தமிழகத்தில் தடை செய்யப்பட்டாலும் அது ராணுவ பகுதியிலும் தன் கொடூரத்தை வெளிப்படுத்தியிருப்பது கொடிய வேதனை என்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.