![Are you okay the Chief Minister asked the opinions of the beneficiaries](http://image.nakkheeran.in/cdn/farfuture/jWJos6_h2sH0Qc33p0mXj6grYboOvnu3IPdFrFzr4fA/1720092245/sites/default/files/inline-images/cm-mks-neengal-nalama-art.jpg)
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா என்ற திட்டத்தில் பயனாளிகளை நேரடியாக வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் மக்களை கல்வி. சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் உயர்வடைய செய்து அவர்களை சமூக நீரோட்டத்திற்குள் கொண்டுவருவதன் மூலம் தமிழ்நாடு சமத்துவ சமுதாயமாக திகழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ்
செயல்படும் தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு பொதுமக்களும் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்குடன், மக்களுக்கும் அரசிற்கும் இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற ‘நீங்கள் நலமா’ என்ற புதியதொரு திட்டம் கடந்த 06.03.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
![Are you okay the Chief Minister asked the opinions of the beneficiaries](http://image.nakkheeran.in/cdn/farfuture/5aALEoVpGUGa0cXnVrFZQURJ1iiAPk0I_wQQQMk8X2Y/1720092289/sites/default/files/inline-images/neengal-nalama-art.jpg)
இத்திட்டம் முதல்வரின் முகவரித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அரசுத் துறைகளின் செயல்பாட்டில் உள்ள முக்கியமான நலத் திட்டங்கள் மற்றும் அரசு துறைகளால் வழங்கப்படும் சேவைகள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டம் பெறப்படுகிறது. அதனடிப்படையில், நலத்திட்டங்களின் பயன்கள் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அரசு வழங்கிடும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வழிவகைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நீங்கள் நலமா வலைத்தளத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்த விவரத் தொகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (04.07.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு பயனாளிகளை வீடியோகால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த அவர்களது பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.