Skip to main content

ஆண் நண்பரை அடித்துக் கொன்ற அங்கன்வாடி ஆசிரியை கைது

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

bb

 

ஆண் நண்பரை தங்கையின் மகனுடன் சேர்ந்து அங்கன்வாடி ஆசிரியை கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிகை கவுதாசபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜோதி (39). இவர் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ஜோதியுடைய கணவர் கேசவமூர்த்தி பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ஜோதி தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் வெங்கடேஷ் என்ற ஓட்டுநருடன் ஜோதிக்கு முறையற்ற தொடர்பு ஏற்பட்டது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தவறாக பேசுவதால் ஆத்திரமடைந்த ஜோதியின் தங்கை மகன் ஹரிஷ், வெங்கடேஷிடம் சென்று 'எங்கள் பெரியம்மாவிடம் இப்படி நீங்கள் நடந்து கொள்ளக் கூடாது; இனிமேல் அவரிடம் பேசக்கூடாது' எனக் கண்டித்துள்ளார். அதேபோல் பெரியம்மா ஜோதியிடமும் சென்று 'இவ்வாறு இனி நடந்து கொள்ளக் கூடாது' எனக் கண்டித்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து ஜோதி வெங்கடேசை வீட்டுக்கு வர வேண்டாம் என எச்சரித்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜோதியின் வீட்டிற்கு மீண்டும் ஓட்டுநர் வெங்கடேஷ் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த ஜோதியின் தங்கை மகன் ஹரிஷ் 'எதற்காக எச்சரித்தும் மீண்டும் இங்கு வந்தீர்கள்' என தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ஜோதியும், ஹரிஷும் ஒன்று சேர்ந்து கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை தாக்கினர். படுகாயமடைந்த வெங்கடேஷ் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று அவர் உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜோதி மற்றும் அவரது தங்கை மகன் ஹரிஷை போலீசார் கைது செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்